இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 29 டிசம்பர், 2015

அரங்க நடராச சீரர் !

செந்தமிழ்     இவரிடம்      கொஞ்சும் -பாடக்
                                                  கெஞ்சும் - மடி
                                                  துஞ்சும் - இவர்
சிந்தையில்     தமிழென்றும்     தஞ்சம் - உயர்
சிறப்பாகிய     கலைமாமணி     தமிழ்மாமணி     விருதாகிய
சிறப்புகள்     ஏந்திடும்     மன்னன் ! -  நிதம்
அறங்களைப்     பாடிடும்     தென்னன் !


சந்தத்தில்     இவர்பாடல்      துள்ளும் - நெஞ்சை
                                                      அள்ளும் - படி
                                                      கொள்ளும் - பல
தாளத்தில்     ஆடிட     உள்ளும் - மொழித்
தண்டாடிடும்     செந்தாமரை     தமிழாகவே     வருமெனச்
சரசத்தில்     மண்டிடும்    உள்ளம் !  - இன்பம்
உரசிட   கண்டிடும்     வெள்ளம் !


தன்னிக     ரில்லாப்பூந்      தோட்டம் - மலர்
                                                   நீட்டம் - அன்பின்
                                                   ஊட்டம் - நனி
தண்டமிழ்     இலக்கண     நாட்டம் - சிந்துத்
தனிப்பாடல்கள்     உருவாகவே    தவமேவிய     வரமாகிய
தமிழிசைப்     பாடிடும்     சூரர் ! - நற்
றமிழ்காக்க     போரிடும்    வீரர் !


அன்பினில்     இவர்க்கிணை       யேது - இல்லை
                                                              சூது - நட்பின்
                                                              தூது - தவ
அன்பிற்குச்     சிகரமென்     றோது - மன
அன்பாலய     பண்பாளரின்     பண்பாமிதை     பண்பாடிடும்
அரங்கங்கள்    நேசிக்கும்     தீரர் - தூ ய
அரங்க     நடராச     சீரர் !
                                                                                                                           -இராதே

வியாழன், 24 டிசம்பர், 2015

தோழர் நல்லகண்ணு பிள்ளைத்தமிழ் - சிறுத்தேர் பருவம்

பயிரின்  செழிப்போ  ஒருபுரட்சி
               பசுமை  புரட்சி  என்பார்கள் ;
     பாலின்  மிகையோ  ஒருபுரட்சி
               பால்வெண்  புரட்சி  என்பார்கள் ;


உயிரைக்  கொடுக்கும்  ஈகையினை
               ஓடுங்  குருதி  தன்னோடே
     ஓங்கும்  மக்கள்  நலன்காக்க
               உழைக்கும்  புரட்சி  மாபுரட்சி !


கயிற்றை  முறுக்கி  திரித்ததுபோல்
               களத்தில் இணைந்தே போராடிக்
     கண்ணாம்  மாந்தர்  உரிமையினைக்
               காணும்  புரட்சி  செம்புரட்சி !


உயிரை  ஈணும்  புரட்சியிலே
               உணர்வாய்ப்  பொதுமை  சிந்தையுடன்
     ஒழுகும்  ஒளியே !   நல்லகண்ணே !
              உருளத்  தடந்தேர்  உருட்டுகவே !

                                                                                     -இராதே

கத்தரிக்காய்

உண்ணச்  சுவைக்கும்  காய்தான் ;
     உருண்டு  திரண்ட  காய்தான் ;
எண்ணெய்க்  கொழுப்பை  நீக்கி
     இதயம்  காக்கும்  காய்தான் ;
மண்டைக்  கவசம்  போட்டு
     மலைக்க  வைக்கும்  காய்தான் ;
கொண்டைக்  காம்பை  நீட்டும்
    குண்டு  கத்தரிக்  காய்தான் !


நரம்பு  நோயைப்  போக்கும் ;
     நாளும்  இளமை  காக்கும் ;
வரம்பு  மீறும்  புற்றை
     வாகாய்த்  தீர்த்து  கட்டும் ;
சிரங்கும்  அரிப்பும்  தோன்றின்
    சீண்டிப்  பார்க்கும்  காய்தான் ;
அரசன்  வேடம்  பூணும்
     அழகு  கத்தரிக்  காய்தான் !

சனி, 12 டிசம்பர், 2015

பேய்மழை !

                    எடுப்பு

பேய்மழை  பெய்து  பெருவெள்ளம்  பாய்ந்தே
ஊரெல்லாம்  மிதக்கிறதே ! - துயர்
பொங்கிடும்  துன்பம்  மக்களின்  வாழ்க்கையில்
கண்ணீரைச்  சொரிகிறதே ! - அழும்
கண்ணீரைச்  சொரிகிறதே !                                                               (பேய் )                                                                                        
                    முடிப்பு

நின்றாடும்  மேகங்கள்  நிலையான  வானத்தில்
நீருற்றும்  களியாட்டமா ? - புவி
நெடுநாளில்  காணாத  நீங்காத  வரலாற்று
நிலைசொல்லும் சதுராட்டமா ?
வெள்ளம்  போதாது  பாரென்றே  ஊர்சூழ
பள்ளம்  இருக்கின்ற  இடமெல்லாம்  நீர்சூழ                                (பேய் )

புரண்டாடும்  வெள்ளத்தில்  திரண்டாடும்  இல்லங்கள்
மிரண்டாடும்  நிலைசொல்லவா ? - அவை
முரண்பட்ட  கொடியோரின்  முளைவிட்ட  பணத்தாசை
முகிழ்வித்த  கதையல்லவா ?
போதும்  மழையென்றே  ஊர்கூறும்  நிலைகொள்ள
வாழும்  நகரத்தின்  சிக்கல்கள்  தனைசொல்ல                           (பேய் )
                               

மண்ணாசை  பேராசை  மகிழ்கின்ற  திருநாட்டின்
புண்ணான  கதைகாணலாம் ! - இதைச்      
சொன்னாலும்  திருந்தாத  சென்மங்கள்  பலபேரின்
செருக்கான  திமிர்காணலாம் !
வருங்  காலங்கள்  சிறப்புற்றே  ஊர்வாழ
பெரும்  வருத்தங்கள்  மறைகின்ற  நாள்காண                            (பேய் )

                                                                                                                          -இராதே

வியாழன், 10 டிசம்பர், 2015

குடி

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         
                எடுப்பு

குடிக்கக்  கூடாது - மது
குடிக்கக்  கூடாது !

               தொடுப்பு

மடியைப்  பிடித்துக்  குடியைக்  கொடுத்து
முடியைப்  பிடித்து  அடியைக்  கொடுக்கும் !                                      (குடி)

               முடிப்பு

குடிக்கக்  குடிக்கப்  போதையேறித்  தவறுகள்  நடக்கும் ;
குடியும்  தெளிந்து  பார்க்க மானம்  குப்புறக்  கிடக்கும் ;
விடிய  விடியக்  குடிப்பதினால்  வேதனைப்  பெருகும் ;
விடிவில்  லாத  வெற்றுவாழ்க்கை  சோதனை  இருகும் !              (குடி)

கட்டின  தாலி  கடையிலேறி  வட்டிக்கு  விற்கும் ;
கட்டின  மனைவி  காதல்வாழ்வு  வீதியில்  நிற்கும் ;
பட்டெனப்  பேசி  சட்டெனமூளும்  சண்டைகள்  மொய்க்கும் ;
விட்டுவி  டாமல்  கிட்டின பழக்கம்  வீழ்ச்சிக்குள்  துய்க்கும் !    (குடி)

ஈரல்குலையும்  குடலும்வெந்து  இரைப்பையும்  அழுகும் ;
இறுதிநாட்கள்  அமைதியிழந்து  தொல்லையில்  முழுகும் ;
உறவும் ஊரும்  ஒன்றுசேர்ந்தே  ஒதுக்கியே  வைக்கும் ;
உறவின் பிரிவில்  உழலும் மனதில்  துன்பமே  தைக்கும் !              (குடி)
                                                                                                                                           -   இராதே

செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஊசிட்டேரி

வெள்ளம்பாயும்  ஊசிட்  டேரி !  வண்ண  வாரி !
அதில்  பயனுறுதாம்  புதுச்  சேரி ! - மின்னும்

விளக் காகியே  ஓளியே  சுடர்
விழிமேவிய  வணிதாவணி
வீசும்புகழ்  அலங்  காரி ! - ஊசி
விருப்பத்தில்  அமைத்திட்ட  ஏரி!

அலையுஞ்  சுழலுங்  கண்டு
வளையில்  நுழையும்  நண்டு
அருமைநடனங்  காணல்  ஈர்க்குமே ! - மீனும்
கரைத்  துள்ளும்  அழகினை  வார்க்குமே! - ஆசை
ஆட்டுமே !  ஓசை  கூட்டுமே !
எழிற்  ஊட்டுமே ! இசை  மீட்டுமே ! - நிதம்
மனதில்  உழலும்  துன்பம்  ஓட்டுமே ! - மக்கள்
மனதில்  மகிழும்  இன்பம்  பூட்டுமே !

கெண்டை  மீனும்  நாணும்
கண்டே  ஊடல்  காணும்
வண்டு  சேரும்  அல்லிக்  கூட்டமே ! - செயற்
கண்டு  மலர்த்தேன்  ஈட்டமே ! - தமிழ்ச்
சிந்து  பாடி  அலை  வந்துமோதிக்  கரை
கண்டு  ஆடும்மலர்த்  தோட்டமே ! - இந்த
விந்தைதான்  காணநல்  நாட்டமே !

இயற்கையின்  கொடையோ ? - இல்லை
செயற்கையின்  கொடையோ ? - இந்த
எழில்நீர்  நிலை
புவியின்  மிசை  வழியும்பொழில்
                                   அசையுங்  கடல்தானோ ?
ஏங்கும்  புட்  களமோ ? - மழை
தேங்கும்  நீர்  வளமோ ? - வாங்கும்
ஏரியின்  முந்தும்  மாதிரி - நீர்
சேர  தேடிட  ஓடிடக்
கூடுங்  கடலோ ? எழிற்நீரின்  கிடங்கோ ?
                                     எண்ணில்லாத  மடங்கோ ?
வான்தரு  பொன்னோ ?  மகிழும்  இயற்கை
                                                  நமக்குத்  தந்ததுவோ ?
                                                                                                                 -இராதே


திங்கள், 30 நவம்பர், 2015

கோனேரி இராமசாமி கும்மி

           

கும்மிய  டிபெண்கள்  கும்மியடி - எழிற்
கொங்கை  குழைந்தாடக்  கும்மியடி

நண்பன்  ராமசாமி  நற்கவி  வாணனை
நாடிக்  கும்மிய   டியுங்கடி - புகழ்ப்
பாடிக்  கும்மிய   டியுங்கடி                                   (கும்மி )

நற்றமிழ்ப்   பாடிடும்   சித்த  னடி - உயிர்
நாதமொ  ளிர்கலைப்   பித்த  னடி
உற்றவர்   நட்புடைக்   கர்த்த  னடி- உள
உறவை   மதிக்கின்ற   சுத்த  னடி                          (கும்மி )  

ஆனந்தத்   தாண்டவக்   கூத்த  னடி - நமை
அன்பி   லசைத்தாடும்   நர்த்த  னடி
கோனரிக்   குப்பத்து   மக்கள்   மகிழ் - நனிக்
கோலன   டிகுண   வாள  னடி                                (கும்மி )  

பண்புடன்   பாடல்செய்   ஐய  னடி - நண்பர்
பாச   மிகஒளிர்    மெய்ய  னடி
கண்ணிய   மிக்கக்   கலைஞ  னடி - உளக்
கள்வன  டிஉயர்    செல்வ  னடி                                (கும்மி )

மக்கள்   கலைகளின்   நேய  னடி - கலை
மக்கள்   போற்றுமுயர்   தூய  னடி  
சொக்கத்    தமிழோது   வாய னடி - வெல்லும்
சொல்லன   டிப்புகழ்   மாய  னடி                              (கும்மி )
                                                                                                                  -இராதே                                            

செவ்வாய், 10 நவம்பர், 2015

கலசம் (புஸ்வானம்)

வண்ண வண்ணத் தீப்பொறி ;
வானம் நோக்கிப் பீச்சுதே ;
சின்னஞ் சிறிய சட்டியில்
சீறும் நெருப்பைப் பீச்சுதே ;
கண்ணைக் கவரும் வகையிலே
கந்த கப்பூ தூவுதே ;
என்ன நெருப்பு மழையிதோ
எரிம லையாய்க் கக்ககுதே ! - இராதே

சங்குச் சக்கரம்

தரையில் சுற்றும் சக்கரம் ;
சங்கு வடிவ சக்கரம் ;
விரைந்து வலமும் இடமுமாய்
விட்டு விட்டுச் சுற்றுதே ;
மரைக ழன்ற சகடம்போல்
மாறி மீறிச் சுழலுதே ;
துரத்தி நெருப்பைக் கக்குதே ;
துள்ளும் சங்கு சக்கரம் !- இராதே

மத்தாப்பூ

கந்த  கத்தூள்  மருந்திலே
கம்பி  நுழைத்த  மத்தாப்பூ;
விந்தை  யாக  சுழற்றலாம்;
வீசி  அசைத்து  மகிழலாம்;
சிந்தும்  சிறிய  பூக்களாய்ச்
சிதறும்  நெருப்பத்  துகள்களே;
வந்து  நின்றே  சுற்றுங்கள்
வண்ணம்  உதிரும்  மத்தாப்பூ! - இராதே

சாட்டை

சின்னச்  சின்னத்  தீச்சரம் ;
சிந்து  கின்ற  தீத்துளி;
என்ன  என்ன  வியப்பிதோ ?
எரிந்தே  ஏறும்  நெருப்பைப் பார் !
கண்கள்  ஈர்க்கும்  நிறங்களாய்க்
கக்குந்  தீயின்  பொரிகள் பார் !
மின்னல்  போலத்  தெரிப்புகள் ;
மின்னி  நெளியுஞ்  சாட்டைபார் !-இராதே

புதன், 26 ஆகஸ்ட், 2015

அன்னை தெரசா பிள்ளைத் தமிழ் - தால் பருவம்

புல்லின்  நுனியில்  பனிசிரிக்கும்;
          பூவி  னிதழில்  தேன்சிரிக்கும்;
     புரளும்  அலையில்  நுரைசிரிக்கும்;
          புதுநீர்  வரவில்  மீன்சிரிக்கும் !


நெல்லின்  விளைவில்  நிலஞ்சிரிக்கும்;
          நீரின்  மிகையால்  நதிசிரிக்கும்;
     நீளும்  இரவில்  இருள்சிரிக்கும்;
          நிலவின்  உலாவில்  ஒளிச்சிரிக்கும் !


வெள்ளு  டையம்மை  குமின்சிரிப்பில்
          விளைவில்  வறியோர்  வாழ்வுயரும்
     வெற்றிச்  செல்வி  சிரிப்பழகி
          வியனு  லகாளும்  கோமகளே !


எல்லை  இல்லாப்  புன்சிரிப்பே !
          எழிலே ! தாலே தாலேலோ
     இன்பந் ததும்பும் தெரசாவே !
          இமையே ! தாலே தாலேலோ
                                                                               -இராதே

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

எனக்குப் புரியல ! - உருப்படி,

                                                  எடுப்பு

                    எனக்குப்   புரியல  -  இங்கு
                    எதுவும்   சரியில !                                                     (எனக்கு)


                                                  தொடுப்பு

                    உண்மை   உரசி   பார்த்துப்   பழகி
                    உயிரைக்   கொடுத்து   காக்கும்   நட்பு              (எனக்கு)


                                                  முடிப்பு

                    கணக்குப்   போட்டுப்   பழகுறான்
                    கவிழ்க்கக்   காயை   நகர்த்துறான்
                    கதையை   முடித்துப்   போகும்போது
                    கழுத்தை   அறுத்தே   கொல்லுறான் !              (எனக்கு)


                    சிரிச்சிச்   சிரிச்சிப்   பழகுறான்
                    சிரிப்பில்   ஆழ்த்தி   மயக்குறான்
                    சிரிச்சி   முடித்துப்   பார்க்கும்போது
                    திருடிக்   கம்பி   நீட்டுறான் !                                 (எனக்கு)


                    அன்பை   யூட்டிப்   பழகுறான்
                    அணைப்பில்   பாசங்   காட்டுறான்
                    அடையும்   நோக்கம்   முடிந்தபின்னே
                    அமுக்கி   மூச்சை   நிறுத்துறான் !                     (எனக்கு)


                    நட்பை   நாடி   பழகுறான்
                    நாமம்   குழைத்துப்   போடுறான்
                    நஞ்சை   வாயில்   ஊற்றிப்பின்னால்
                    நல்ல   வன்போல்   நடிக்கிறான் !                       (எனக்கு)


                    பழகத்   துடிக்கும்   நண்பனே
                    பார்த்துப்   பழகு   நண்பனே
                    பயனெண்   ணாமல்   பண்பினோடு
                    பகையை   வெல்வாய்   நண்பனே !                     (எனக்கு)                                                                                                                                                                      - இராதே

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

தோழா நேர்கொள் ! - கண்ணி

உள்ளத்தில்  கள்ளம்  வைத்தே
     உதட்டினில்  வெல்லம்  வைத்தே
     ஊர்கூட்ட  நினைப்பா  ரடா - தோழா
     உண்மைகள்  மறைப்பா  ரடா !


வள்ளுவன்  பெயரைச்  சொல்லி
     வாய்கூச  பொய்கள்  சொல்லி
     வலைகளை  விரிப்பா  ரடா - தோழா
     வஞ்சக  நெஞ்ச  ரடா !


கொள்கைமான்  காந்தி  யாரைக்
     கொன்றவன்  கோட்சே  வுக்குக்
    கொடிகட்டி  மகிழ்வா  ரடா - தோழா
    கொலைவெறிக்  கூட்ட  மடா !


முள்மன  வேலி  யிட்டு
     முடக்கிடும்  மடமை  பேணி
     முரண்பகை  வளர்ப்பா  ரடா - தோழா
     மூட்டித்தீக்  காய்வா  ரடா !


மக்களைத்  தூண்டி  விட்டு
     மதவாதம்  நாளும்  பேசி
     மகிழ்வினில்  திளைப்பா  ரடா - தோழா
     மதவெறி  அரக்க  ரடா !


வக்கனை  கூத்தும்  ஆடி
     வகைவகை  கதைகள்  கூறி
     வாக்குகள்  சேர்ப்பா  ரடா - தோழா
     வழிப்பறி  கும்ப  லடா !


முக்கண்ணன்   மாதோர்  பாகன்
     முழுக்கதை  குறைகள்  கூறி
     முடக்கினர்  எழுத்தை  யடா - தோழா
     மௌடிக  கூட்ட  மடா !


எக்காள  மிடுவோர்  தம்மை
     எதிர்த்திட  ஒன்றாய்க்  கூடி
     இயங்கிட  தோள்கொ  டடா - தோழா
     எதிரியை  நேர்கொள்  ளடா !
                                                                             -இராதே

கண்ணாம் பூச்சி

கண்ணாம்  பூச்சி  வாழ்க்கை - இதில்
காசென்ன  பணமென்ன  சேர்க்க !           (கண்ணா )



ஆசை  கொண்டவன்  மனமோ
அந்தரத்தில்  ஆடுதே !
ஆள  பலகோடி  தேடி
ஆலவட்டம்  போடுதே !                               (கண்ணா)


மூணு  வேளைச்சோற்றை   யெண்ணி
மூச்சுவாங்கும்  உயிரு !
முனுமு  னுக்குதே  உலகு
முடிச்சுவிழுந்த  கயிறு !                               (கண்ணா)


ஆன  வமனக்  குரங்கு
ஆட்டமாடித்  தாவுதே !
ஆடுங்  கிளைத்தானு  டைந்தே
அதோகதி  ஆவுதே !                                      (கண்ணா)

                                                                                                 -இராதே

நிலா

கொட்டுங்  கொட்டும்  பனி
     குளிர்  நிலா -புவி
ஒட்டி  ஒட்டிச்  சுழன்
     றோடும்  நிலா !

குட்டிக்  குட்டிப்  பிறை
     குறை  நிலா - முழு
வட்ட  மாகும்  எழில்
     மஞ்சள்  நிலா !

பட்டு  வெய்யோன்  ஒளிப்
     படர்  நிலா - மழை
முட்டும்  முட்டும்  முகில்
     மூடும்  நிலா !

விட்டே  ஈர்க்கும்  கடல்
     விசை  நிலா - அலை
எட்டித்  துள்ளச்  செயும்
     ஈர  நிலா !

பாட்டி  சுட்ட  வடை
     பகர்  நிலா - பலர்
கூட்டாஞ்  சோறு  பெறும்
    கூடல்  நிலா !

வாட்டுங்  கன்னி  நுதல்
     மலர்  நிலா - அது
காட்டும்  மன்ம  தனின்
     காதல்  நிலா !

தீட்டும்  கும்மி  ருட்டுத்
     திரை  நிலா - அவை
சூட்டுங்  கோள்கள்  நிழல்
     சூழும்  நிலா !

காட்டும்  வண்ண  எழில்
     கலை  நிலா - சுடர்
மீட்டி  இருள்  மாய
     மேவும்  நிலா !
                                                      -இராதே


திங்கள், 26 ஜனவரி, 2015

எங்கே தேடுவேன் ?

                              எடுப்பு

எங்கே  தேடுவேன் ?  - குளத்தை
எங்கே  தேடுவேன் ?                                                                              (எங்கே)                                                                                                                                  

                              தொடுப்பு

பாட்டன்  பூட்டன்  சேயனும்
வெட்டி  வைத்த  குளத்தை
பட்டித் தொட்டு   யெங்கிலும்
தட்டுப்  பட்டக்  குளத்தை                                                                     (எங்கே)

                              முடிப்பு

குப்பைகொட்  டிமூடியே  மறைத்துவிட்  டனரோ ?
கூளங்கூள  மாய்ஆலைக்  கழிவைக்கொட்  டினரோ ?
குடியிருக்க  வீட்டுமனை  பிரித்துவிற்  றனரோ ?
கோபுரமாய்க்  கட்டிடங்கள்  கட்டியேவைத்  தனரோ ?             (எங்கே)


மூடநம்பிக்  கைகொண்டே  மூடிவிட்  டனரோ ?
முழுமுதல்  பிள்ளையாரைப்  போட்டுநிரப்  பினரோ ?
முழுப்பூச  ணிக்காயைச்  சோற்றில்மறைத்  ததுபோல்
முழுவிளை   யாட்டுத்திட  லாகமாற்  றினரோ ?                         (எங்கே)


குளமே !  குளமே !  குளமே !  குளமே !- உன்னை
எங்கே  தேடுவேன் ?
                                                                                                                        -இராதே


ஞாயிறு, 25 ஜனவரி, 2015

புத்தக சாலை

அறியாமை  இருள்போக்கி
          அறிவதனை  விரிவாக்க
                    அன்றாடம்  பூக்கும்  சோலை ;
          அறிஞரெனப்  பொறிஞரென
                    ஆய்வுகள்  பலதொடர
                              அறிவுக்கண்  திறக்கும்  சோலை ;

செறிவுடைய  நூற்கற்க
          செழித்தெழும்  மூளையதன்
                    செயல்களைத்  தூண்டும்  சாலை ;
          செல்லுமிடம்  புகழ்காண
                    செம்மாந்த  நிலைக்காண
                              செய்தவம் நூற்கும்  சாலை ;

நெறியுடைய  கல்வியை
          நீள்கின்ற  வாசிப்பை
                    நித்தமும்  வழங்கும்  இடமே !
          நேசமிகும்  ஆசானாய்
                    நெருங்கிய  நண்பனாய்
                              நின்றறிவு  கூட்டும்  தடமே !


பொறிகளைத்  தட்டிடும்
          பொன்னேட்டுத்  தொகுப்புகள்
                    பொலிவோடு  காக்கும்  சாலை ;
          பொதுவறிவு  மேன்மேயுற
                    புலன்களின்  தேடலில்
                              புதியன  கிட்டும்  சாலை ;

குறிப்புகள்  மலையளவு
          கொண்டபல  நூல்களின்
                    குவியலில்  தொடுக்கும்  ஆரம் ;
          கூர்மையாய்  நினைவாற்றல்
                    கொண்டதொரு  சிந்தையைக்
                              கொடுத்திடும்  வேள்விச்  சாரம் ;

தெறிப்புறும்  வினாக்களைத்
          திகைப்புறும் விடைகளைத்
                    தேடிட  காணும்  இடமே !
          தெளிவுகள்  பிறந்திட
                    தேவைகள்  அறிந்திட
                              தேறுதல்  கூறும்  தடமே !


நூண்ணறிவு  துலங்கிட
          நுட்பங்கள  விளங்கிட
                    நூல்களின்  துணையைக்  கொள்வோம் ;
          நொடிதோறும்  பயின்றிட
                    நோக்கங்கள்  வென்றிட
                              நூற்றவம்  இயற்றி  வெல்வோம் ;

மண்டிடும்  நூலறிவு
          மாசற்ற  புரிதல்கள்
                    மனத்திலே  இருத்தி  வைப்போம் ;
          மாண்புறும்  நூற்கலை
                    மதிப்புடன் போற்றிட
                             மங்காமல்  ஒளிர்ந்து  நிற்போம் ;


கண்டிடும்  செல்வங்கள்
          கண்டிடும்  உயர்நிலை
                    கண்டிடும்  நாளும்  நலமே !
          கற்றிட  நூற்களைக்
                    கற்றிடும்  பழக்கத்தால்
                             கவலைகள்  ஓடும்  தலமே !
                                                                                      -இராதே

எங்கள் தோட்டம்

கொடுயேறிப்  பந்தலிலே  படர்ந்தே  தொங்கிக்
               கொத்துகிற  நாகமென  புடலங்  காய்கள்
பொடிக்கல்லைக்  கட்டிவிட்டு  நீட்ட  மாக
               புவியினையே  தொடும்படியாய்  வளர்தல்  செய்வர் ;
பிடியற்றுக்  கொடிபடரும்  பரங்கிக்  காய்கள் ,
               பெரும்பானைப்  பூசுணைக்காய்,  சுரையின்  காய்கள் ,
மடிநிறைய  காய்க்கின்ற  அவரைக்  காய்கள் ,
               மரங்குலுங்குக்  காய்க்கின்ற  முருங்கைக்  காய்கள் !


வெண்டைக்காய்  கத்தரிக்காய்  செடியின் காய்கள் ,
               விரும்புசுவைக்  கூட்டுகிற  பீர்க்கங்  காய்கள் ,
சுண்டைக்காய்  வாழைக்காய்  புளிமாங்  காய்கள் ,
               சுவையூட்டும்  தக்காளி வகைகள்  காய்க்கும் ;
தொண்டைவரைக்  கசப்பிருக்கும்  பாகற்  காய்கள் ,
               துவர்ப்போடே  புளிக்கின்ற  நெல்லிக்  காய்கள் ,
கண்டபடி  விளைந்திங்கே  மகசூல்  காணும்
               காய்கறிகள்  வளர்தோட்டம்  எங்கள் தோட்டம் !
                                                                                                                      -இராதே

வெள்ளி, 23 ஜனவரி, 2015

காரறிவு

கறுத்த  அறிவே  காரறிவு ;
          களவுகள்  ஆளும்  சிற்றறிவு ;
அறுத்துத்  தாலிக்  கொடிபறிக்கும் ;
          அடுத்தோர்  வாழ்வில்  குழிப்பறிக்கும் ;
உறுத்தல்  இன்றி  ஊறுசெய்யும் ;
          உழைப்பை  விடுத்துத் திருடச்செய்யும் ;
சிறுத்த  பண்பின்  வெளிப்பாடே
         சிந்தை  யில்லாக்  காரறிவு !


காற்றில்  ஒளிரும்  அலைக்கற்றை
          கரவில் ஊழல்  பலபுரிந்தவர்,
ஆற்று  மணலைக்  கனிமத்தை
          அகழ்ந்து  திருடி  மகிழ்தலென
சேற்றை  வாரி  இறைக்கின்ற
          செயலாம்  இந்தக்  காரறிவு ;
ஊற்றாய்ப்  பெருகும்  காரறிவால்
          உழலும் ஊழல்  ஒழிப்பீரே !


அடுத்தோர்  பொருளை  உள்ளத்தால்
          அடைய  நினைத்தல்  காரறிவு ;
எடுக்கும்  வாய்ப்புக்  கிடைத்திடினும்
          எடுக்கா  திருத்தல்  பேரறிவாம் ;
கொடுத்த  பொறுப்பில்  திருடாமல்
          கொள்கைக்  குன்றாய்  வாழுதலே
எடுத்துக்  காட்டாய்  நின்றுவிடும் ;
          இயங்கும்  உலகை  வென்றுவிடும் !


பறித்து  வாழும்  செயலினையே
          பழக்க  மாக்கும்  காரறிவு ;
குறித்த  வாழ்க்கை  வாழ்பவரின்
          குணத்தில்  இல்லை  காரறிவு ;
அறிந்த ஐயன் வள்ளுவனார்
          அறைந்தார்  குறளில் இச்செய்தி
பொறிப்பீர்  கருத்தை  நெஞ்சினிலே
          புவியில்  திருட்டை  ஒழிப்பீரே !
                                                                           - இராதே

புதன், 21 ஜனவரி, 2015

பூந்தோட்டம்

கொடிமுல்லை  காந்தள்பூ  குலுங்கிப்  பூக்கும் ;
          குண்டுமல்லி  சம்பங்கி  மணமாய்  வீசும் ;
செடிமுள்ளில்  சிரித்தழகு  சேர்க்கும்  ரோசா ;
          செம்பருத்திச்  செம்மலர்கள்  சிவப்பைக்  காட்டும் ;
வடிவழகு  சாமந்தி  வகைகள்  எல்லாம்
          வனப்பான  மஞ்சளதன்  ஒளியைக்  கூட்டும் ;
அடித்தீண்டி  படர்ந்திருக்கும்  பட்டு  ரோசா ;
          அசைந்தபடி  அழைக்கின்ற  சங்குப்  பூக்கள் !


ஒளிதேடி  திசைதிரியும்  பரிதிப்  பூக்கள் ;
          ஊதாப்பூ  கண்சிமிட்டி  ஓரங்  காட்டும் ;
களிக்கின்ற  மென்மலராம்  மகிழம்  கொட்டும் ;
          காட்டுமல்லி  வாடைவந்து  நாசி  தீண்டும் ;
பளிச்சென்றே  ஒளிர்கின்ற  கொன்றைப்  பூக்கள் ;
          பளபளக்கும்  இருவாட்சி  மலர்கள்  நாறும் ;
அளிக்கின்றேன்  அழகென்ற  சிரிப்பைக்  காட்டி
          அதிசயப்பூ  "டேரா"வோ  அன்பைச்  சாற்றும் !


பனிநாளில்  அரும்பிடுமே  டிசம்பர்  பூக்கள் ;
          படிகளிலே  பூசணிப்பூ  எழிலைத்  தூண்டும் ;
நனியழகு  நாகலிங்கப்  பூக்கள்  சிந்தும் ;
          நயமிக்க  செண்பகப்பூ  செழித்தே  வீழும் ;
தனிமையுடன்  அல்லிமலர்  முகத்தை  நீட்டும்
          தண்ணீரில்  தள்ளாடி  நிலவிற்  கேங்கும் ;
அனிச்சமலர்  அரளிப்பூ  எல்லாப்  பூவும்
          அடுக்கடுக்காய்ப்  பூக்குமெங்கள்  தோட்டம்  தானே !
                                                                                                                     - இராதே




வெள்ளி, 16 ஜனவரி, 2015

அன்பு

                                           
அன்புதான்  இன்ப  ஊற்று ;
      அன்புதான்  மூச்சுக்  காற்று ;
அன்புதான்  பண்பின்  நாற்று ;
     அன்புதான்  அறிவின்  கீற்று ;
அன்பினால்  நட்பை  யேற்று ;
     அன்பினதன்  உண்மை  சாற்று ;
அன்பாலே  உலகை  மாற்று ;
     அன்பொன்றே  அருளின்  ஈற்று !

அன்பொன்றும்  இல்லை   யென்பார்
     அளிக்காது  பொருளைச்  சேர்ப்பார் ;
அன்பூறும்  உள்ளம்  கொண்டோர்
     ஆருயிரை  உடலை  ஈவார்;
அன்பதே  இல்லை  யென்றால்
     அழகுத்தோல்  போர்வை  மட்டே;
அன்புடல்  உயிர்க்குக்  கூடு ;
     அன்பிலார்  எலும்புக்  கூடு !

அன்பென்ற  வெள்ளம்  மீறின்
     அடைபடும்  தாழ்பாள்  உண்டோ ?
அன்பெழக்  கசியும்  கண்கள்
     அன்பதன்  ஆழங்  காட்டும் ;
அன்பினால்  பூசல்  ஓயும் ;
     அன்பாலே  துன்பம்  மாயும் ;
அன்புசால்  வாழ்க்கை  வாழ்ந்தால்
     அறம்போற்றும்  மாந்தன் ஆவான் !

வாடிய  பயிரைக்  கண்டே
     வள்ளலார்  வதைந்த  அன்பு ;
சூடிய  மாலை  தந்த
     சுடர்க்கொடி  கோதை  அன்பு ;
பாடியே  தமிழில்  அவ்வை
     பகர்ந்தது  மொழியின்  அன்பு ;
தேடியே  திசைகள்  தோறும்
     தேனூறும்  அன்பின்  மாட்சி !

வான்மழை  முகிலின்  அன்பு ;
     வளர்தென்றல்  காற்றின்  அன்பு ;
வானவில்  நிறங்கள்  ஏழில்
     வழிந்திடும்  ஒளியின்  அன்பு ;
தேன்மலர்  மொய்க்கும்  வண்டு
     தேனினை  வழங்கும்  அன்பு ;
மாண்புடைத்  தமிழர்  பண்பில்
     மண்டிடும்  அன்பு  தானே !
                                                        -இராதே