இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 12 ஜூலை, 2026

கவி முடித்தேன்


 https://suno.com/s/SG2iJHQAeCJNtQ7m


கவி முடித்தேன் !


பாயாத விழிஅம்பு பார்த்தே நின்றான் ;

    பணித்தஇமை அழைத்துமே அருகே சென்றான் ;

ஓயாத முத்தமழை பெய்யா இதழா ?

    உறவாடும் உதடுகளை விழியால் மென்றான் ;

மேயாத மானுண்டா புல்லைக் கண்டு ?

    மேவிய மெல்லிதழால்  மேன்மை வென்றான் ;

தேயாத ஆசைவளர்க் காதல் கொண்டே

    தேனிதழில் தித்திக்கும் அமுதம் உண்டான் !


பாயாக அவள்விரிந்தாள் ! படுத்து கொண்டான்

    பட்டெரியும் மோகத்தீ அணையா தென்றாள் ;

தீயாகக் கனன்றாலும் குளிர்ந்தாள், வேர்த்தாள்

    தீந்தமிழின் தேனனைய சுவையால் ஈர்த்தாள் !

மாயாத அகனமர்க் காதல் நீள

    மான்விழியாள் பெற்றின்பம் திருப்பித் தந்தாள் ;

சேயாக அவன்மார்பில் தலையைச் சாய்த்தாள்

    சேர்ந்தின்பம் துய்த்தகதை கண்ணில் பூத்தாள் !


வெண்ணிலவு இக்காட்சி முகிலுள் சொல்ல

    வெண்முகில்கள் ஒன்றொன்றை மோதித் தள்ள

வண்ணமழை கோடையிலும் தூறித் துள்ள

    வனமயிலோ தன்சிறகை விரித்துச் செல்ல

எண்ணிலாப் பயிரசைவு அழகை அள்ள

    எழுந்தென்றல் களிநடனம் புரிந்தே வெல்ல

பெண்ணவளோ தலைகவிழ்ந்து நாணங் கொள்ள

    பெருந்தகைமை யோடுகவி முடித்தேன் மெல்ல


  - பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக