இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 19 ஜூலை, 2026

காதலாறு

 காதலாறு !


https://suno.com/s/l36OFyMaLjrvafdY


வந்து வந்து வந்து வந்து

நெஞ்சுக் குள்ளே நின்னுக் கிட்டே

அஞ்சி அஞ்சி எட்டிப் பார்த்தே

என்ன பண்ணுறே ! - நீ

என்ன பண்ணுறே !



சிந்தும் முந்தும் செவ்வி தழ்கள்

சேதிச் சொல்ல முன்னே நின்னுக்

கொஞ்சிக் கெஞ்சி ஆடு மாறு

தொல்லைப் பண்ணுறேன் ! - நான்

தொல்லைப் பண்ணுறேன் !



மண்ணுக் குள்ளே வேரைப் போலே

கண்ணுக் குள்ளே என்ன வைச்சி

காத லாறு பாயு மாறு

கணக்குப் பண்ணுற ! - நீ

கணக்குப் பண்ணுற !



வேர்உ றிஞ்சும் நீரைப் போலே

நானு றிஞ்சி உன்னி னைப்ப

வேத னையில் பங்கு வைக்க

வேலைப் பண்ணுறேன் ! - நான்

வேலைப் பண்ணுறேன் !



காத்தி லாடுங் கிளையைப் போலே

சேத்தி லாடும் நாத்துப் போலே

சேர்ந்தே உள்ளம் ஊஞ்ச லாட

ஆசை வைக்கிறே - நீ

ஆசை வைக்கிறே !



கண்கள் இரண்டால் கொக்கிப் போட்டேன்

சிக்கிக் கொண்ட மீனைப் போலே

திக்தித் திக்தித் துள்ள வைக்கப்

பூசை வைக்கிறேன் - நான்

பூசை வைக்கிறேன் !



சொல்லுக் குள்ளே சொல்ல வைச்சி

சொக்க வைக்கும் முள்ளத் தைச்சி

அள்ளி அள்ளிக் குத்தஞ் சொல்லிப்

பழி போடுறே ! - நீ

பழி போடுறே !



பத்தப் பத்தச் சுட்டெ ரிக்கும்

பார்வை யாலே பத்த வைச்சி

வேர்த்து வேர்த்துக் கொட்ட வைக்க

வழி தேடுறேன் ! - நான்

வழி தேடுறேன் !


 - பொறிஞர் இராதே


நல்லதைச் சொன்னேன்!


 நல்லதைச் சொன்னேன் !


ஊருக்குநான் நல்லதைச் சொன்னேன்

   உள்ளதைநான் உரக்கச் சொன்னேன் ;

பேருக்குத்தான் கேட்டு வைச்சாங்க;

   பேசும்வாயைப் பூட்டி வைச்சாங்க !      ( ஊருக்கு)


ஊருக்குள்ளே கேட்கணுமாம்

   உண்மைதனைச் சொல்வதற்கு ?

யாரையெண்ணிப் பார்க்கணுமாம்

    உள்ளக்கதை சொல்வதற்கு ?    ( ஊருக்கு )


நெல்லுக் குள்ளே சோறிருக்கும்

நெஞ்சிக் குள்ளே நஞ்சுமிருக்கும்

வஞ்சத்தைத் தான் மறைச்சி வைச்சா

வாழ்வில் லென்ன மிஞ்சியிருக்கும் ?   ( ஊருக்கு ) 1


ஆணுக் குள்ளே பெண்ணிருக்கா

பெண்ணுக் குள்ளே ஆணிருக்கான்

பூத்தாடும் உறவுக் குள்ளே 

பூடகமாய்ப் பகையிருக்கே ?   ( ஊருக்கு ) 2 


நட்புக் குள்ளே கற்பிருக்கே

கற்பு யெனும் நெருப்பிருக்கே

உறவாடி அதை அணைச்சா

உள்ளுக் குள்ளே வலியிருக்கே ?   ( ஊருக்கு ) 3


கண்ணுக் குள்ளே நீருரிக்கே

கட்டி அழ யாரிருக்கா ?

மண்ணுக் குள்ளே போகுமுன்னே

மானஞ் சொல்லும் வாழ்விருக்கே !   ( ஊருக்கு ) 4


உனக்குள்ளே மானமிருக்கே

உணர்ந்தெழ ஞானமிருக்கே

நடந்த தெண்ணி வருந்திக்கணும்

நாளும் நம்மைத் திருத்திக்கணும் !   ( ஊருக்கு ) 5


 - பொறிஞர் இராதே

வெள்ளி, 17 ஜூலை, 2026

மௌனம் வெல்லும் !

 மௌனம் வெல்லும் !


அந்திவரும் செவ்வானில் அரைத்தமஞ்சள் ஆரம்

உந்திவரும் விழியசைவில் ஒளிர்க்காதல் வீரம்

முந்திவரும் முகத்தழகில் முத்திதழின் ஓரம்

சிந்திவரும் சந்தமெலாம் செந்தமிழின் சாரம்



பாலழகு மேனியிலே பருவமழை கண்டு

மேலழகு மூச்சுயெழ விம்முவதும் உண்டு

நூலளவே இடையளவு நொடிவதிலே விண்டு

காலழகுப் பாடாத கவிஞனில்நான் மண்டு



முத்தமழை முகில்வரவில் மோகமயி லாடும்

வித்தையெழ விழிதிரைகள் மின்னலென மூடும்

தத்தைமனந் தாவிவர ' தந்தனத்தோம் ' போடும்

பத்துவிரல் தொட்டணைக்கப் பஞ்சணையில் தேடும்



பார்வையது பட்டவுடல் பரவசத்தில் துள்ளும்

வேர்வையது பொங்கியெழ வேதனையைத் தள்ளும்

தேர்ந்தசுகம் கண்டதிலே சேர்ந்தகதை சொல்லும்

வார்த்தைவழித் தேடுதலில் மௌனநிலை வெல்லும் 


 - பொறிஞர் இராதே


இறால்


 இறால் !


முறுக்கு மீசை இறாலின்

    முன்னே நீளும் முள்ளுண்டே ;

குறுக்கும் நடக்கும் அசைந்திட

    கூர்ந்த கொம்பும் உணர்த்துமே ;

துறுத்தும் கூட்டுக் கண்களால்

    துழவித் துருவி நகருமே ;

சறுக்கி நீந்தித் திரிந்துமே

    தரையில் நடக்கக் காலுண்டே !



கூடும் கெட்டக் கொழுப்பினைக்

    கெடுத்தும் இதயம் காக்கவும்

வாடும் மூளை சுறுசுறுப்பை

    வழங்கும் புரதம் , எதிர்ப்பாற்றல்

தேடும் பார்வை சிக்கல்கள்

    தீர்த்தே கண்கள் மேம்படவும்

ஈடு கொடுக்கும் சத்துகள்

    ஈனும் உயிரி இறாலே !



நஞ்சு நரம்பு நீக்கியே

    நன்கு சமைத்து சுவைக்கலாம் ;

கொஞ்சம் அளவே தின்பதால் 

    கொழுப்பும் அரிப்பும் அண்டாதே ;

அஞ்சி டாமல் உண்ணுங்கள்

    அழகாய் உடலைப் பேணுங்கள் ;

வஞ்ச மில்லாக் கடலுணவை

    வாரி கொடுக்கும் இறாலே !


 - பொறிஞர் இராதே

காயும் நிலா !

 காயும் நிலா !


எடுப்பு


காயும்நிலாப் பாயும்ஒளி

      தங்க மாங்கனி !

தோயும்இதழ் தேயும்மொழி

      சொல்ல வாஇனி !      ( காயும்)


தொடுப்பு 



சாயும்மனம் போயும்விழும்

      அள்ளும் மோகினி !

மேயும்உயிர்த் தீயும்எழும்

      இன்ப வாகினி !       ( காயும் )


முடிப்பு



அலைமோதுதா ? விளையாடுதா ?

   உளந்தாவித் தாவித்திண் டாடுதே !

நிலைமீறுதா ? மகிழ்வாகுதா ?

   களமாடி ஆடிக்கொண் டாடுதே !  ( காயும் ) - 1



விழிபேசுமா ? மொழிகூசுமா ?

   மலர்த்தேடித் தேடிவண் டூடுதே !

வழிதூரமா ? இதழூறுமா ?

   இளந்தென்ற லூடிமன் றாடுதே !  ( காயும்) - 2



இதுபோதுமா ? இனும்வேண்டுமா ?

   நினைவாகி ஏகிமெய் வாடுதே ?

இதுமோதலா ? தருங்காதலா ?

   எனைமீட்டி மீட்டிபண் பாடுதே !  ( காயும் ) - 3


      - பொறிஞர் இராதே


ஞாயிறு, 12 ஜூலை, 2026

முட்டை


 முட்டை

முட்டை முட்டை முட்டைதான்
    முந்தும் சத்தில் முதன்மைதான் ;
முட்டை மஞ்சள் கருவிலே
    முறையாய்ப் புரதம் ஒமேகாவும்
கொட்டிப் பிணைந்து கிடக்குதாம் ,
    கொழுப்பை அடக்க உந்துதாம் ;
முட்டை இதய நோயினை
    முன்னே நின்று காக்குதாம் !


கெட்ட கண்கள் பார்வையைக்
    கேடு நீக்க செய்வதும் 
கெட்ட கொழுப்பின் தீமையைக்
    கெடுத லின்றி மாய்ப்பதும் 
கட்டுக் கடங்கா நீரிழிவைக்
    கட்டுக் குள்ளே வைப்பதும்
முட்டை முட்டை முட்டையே
    முழுதும் நம்பி உண்ணுங்கள் !


பெட்டை கோழி இடுவது
   பெரிதும் நலங்கள் பயப்பது
வட்ட நீள கோளமாய்
    வடிவில் கண்ணைப் பறிப்பது
கொட்டும் உயிர்ப்பு சத்துகள்
    குவிந்து செழிக்கும் முட்டையை
விட்டு விடாமல் தின்னுங்கள்
    விளையும் நன்மை கொள்ளுங்கள் !

                   - பொறிஞர் இராதே

கவி முடித்தேன்


 https://suno.com/s/SG2iJHQAeCJNtQ7m


கவி முடித்தேன் !


பாயாத விழிஅம்பு பார்த்தே நின்றான் ;

    பணித்தஇமை அழைத்துமே அருகே சென்றான் ;

ஓயாத முத்தமழை பெய்யா இதழா ?

    உறவாடும் உதடுகளை விழியால் மென்றான் ;

மேயாத மானுண்டா புல்லைக் கண்டு ?

    மேவிய மெல்லிதழால்  மேன்மை வென்றான் ;

தேயாத ஆசைவளர்க் காதல் கொண்டே

    தேனிதழில் தித்திக்கும் அமுதம் உண்டான் !


பாயாக அவள்விரிந்தாள் ! படுத்து கொண்டான்

    பட்டெரியும் மோகத்தீ அணையா தென்றாள் ;

தீயாகக் கனன்றாலும் குளிர்ந்தாள், வேர்த்தாள்

    தீந்தமிழின் தேனனைய சுவையால் ஈர்த்தாள் !

மாயாத அகனமர்க் காதல் நீள

    மான்விழியாள் பெற்றின்பம் திருப்பித் தந்தாள் ;

சேயாக அவன்மார்பில் தலையைச் சாய்த்தாள்

    சேர்ந்தின்பம் துய்த்தகதை கண்ணில் பூத்தாள் !


வெண்ணிலவு இக்காட்சி முகிலுள் சொல்ல

    வெண்முகில்கள் ஒன்றொன்றை மோதித் தள்ள

வண்ணமழை கோடையிலும் தூறித் துள்ள

    வனமயிலோ தன்சிறகை விரித்துச் செல்ல

எண்ணிலாப் பயிரசைவு அழகை அள்ள

    எழுந்தென்றல் களிநடனம் புரிந்தே வெல்ல

பெண்ணவளோ தலைகவிழ்ந்து நாணங் கொள்ள

    பெருந்தகைமை யோடுகவி முடித்தேன் மெல்ல


  - பொறிஞர் இராதே