இராதே

இராதே
eradevadassou

திங்கள், 27 ஏப்ரல், 2026

ஐயனார்

 ஐயனார்


(காவடிச் சிந்து)


எல்லைதொறும் ஐயன்செயுங் காவல் - ஏழை

    எளியோரைக் காப்பதில்பே ராவல் - ஊரின்

      ஏரிக்கரை காடுகண்மாய்

      நீர்நிலைகள் ஓடைவெளி

          எங்கும் - புகழ்

          தங்கும் !



தொல்லைகளை வேரறுக்கும் வீரம் - அஞ்சுந்

    துன்பங்களை விரட்டிடுந் தீரம் - இரவில்

      துள்ளு'சேமக் குதிரையேறி

      விள்ளுபெருஞ் சேனையோடு

          வேட்டை - அழியும்

          சேட்டை !              (1)



உருமி யடிக்கும்மேள தாளம் - உணர்வை

    உசுப்பிடுமே குலவை ஓலம் - நெடும்

      ஊர்வலமாய் ஊர்முழுதும்

      ஆர்வமுடன் கருப்பனோடு

          வருவார் - துணிவு

          தருவார் !


உருட்டும் மிரட்டும்வாளை யேந்தி - கெஞ்சி

    ஒண்டும் அடியார்க்கருளும் சாந்தி - தந்தே

      ஊட்டமுடன் ஓடித்தேடி

      ஆட்டமுடன் தீமையினைக்

          கொல்வார் - அறம்

          வெல்வார் !       ( 2)




பூரண புட்கலையோ டிணைந்தே - வரம்

    பொழிவதில் ஐயனாரும் முனைந்தே - இன்பம்

      பூணுதலில் பேணுதலில்

      வேண்டுபவர் வாழஅருள்

          புரிவார் - வாழ்த்து

          சொரிவார் !


பேரழகுக் 'குண்டலமும் குழையும்' - செவியில்

    பீடுடனே ஊஞ்லாடிக் குழையும் - பெருமை

      பேசுகிற கெடாமீசை

      கூசுகிற ஜடாமுடி

          காட்சி - காண

          மாட்சி !               (3)



'சங்கன்', 'சின்னான்','சோணை',நடுக் காடன்' - வீரன்

    'சமயன்','மூக்கன்','சுடலை மாடன்' - சீடர்

      தாங்கிடவே தோள்கொடுத்தே

      பாங்குடனே சுற்றும்'பரி

          வாரம்' - பண்பின்

          ஆரம் !


குங்கும திருநீரு சந்தனம் - பெற்றுக்

    கொண்டோர் பெறுமனமோ நந்தனம் - நாட்டார்

      குறைகளையும் பிணிகளையும்

      முறையறிந்தே முற்றுங்களை

          யெடுப்பார் - மகிழ்வு

          கொடுப்பார் !        (4)


                   - பொறிஞர் இராதே

வியாழன், 31 ஜூலை, 2025

காளை


 காளை

          எடுப்பு

சீறுங்காளை

    சீண்டவருங் காளை;

முறுக்குக் கொம்பால்

    முட்டவருங் காளை;

குறுக்க மறுக்க

    சுழட்டிவரும் வாலை;

சறுக்கி டாமல்

    துரத்திவரும் ஆளை !             ( சீறு )


           முடிப்பு


ஊறும் இரத்தம்

     உதிர குடலை

நாறு நாறாய்

     நறுக்கி சரிக்கும் ;

ஏறும் வேகம்

     இறங்கி குதிக்கும்

தாறு மாறா

     புழுதி கிளப்பும்

தடுக்க வந்தவன் முடுக்க வந்தவன்

நெடுக்க வந்தவன்

எடுக்க வந்தவன்

    சதையைப் பிரிச்சி

     கதையை முடிச்சி

          அனுப்பும் 

           காளை ! காளை !     ( சீறு )


வாடி வாசல்

     ' ஏறு தழுவி '

கூடி ஆடி

     ' மஞ்சு விரட்டி '

நாடி ஓடி

     ' சல்லி கட்டு '

தேடி பிடிச்சும்

     அடங்கா காளை

தெறிக்க விட்டவன் தெரிந்து விட்டவன்

சிரிச்சி விட்டவன் சிலிர்த்து விட்டவன்

     சுருக்க மிரட்டி

      தூர விரட்டி

          அனுப்பும்

           காளை ! காளை !                ( சீறு )


              - இராதே

இதயத்தைத் தின்னாதே !



இதயத்தைத் தின்னாதே 

 

          எடுப்பு


துளிகளை ஏனோ

          எண்ணுகிறாய் ?

     சும்மா  இதயத்தைத் 

          தின்னுகிறாய் !

வலிகளில் வஞ்சம்

          பின்னுகிறாய் !

     வதைக்கும் அன்பிலே

          மின்னுகிறாய் ! ( துளி )


            தொடுப்பு


எளியவன் மீதே ஏக்கங்கள்

          ஏனடி ?

இன்பத்திலே வந்த துன்பங்கள்

          தானடி ! ( துளி )



           முடிப்பு


அடைபட்ட தென்றல் மீண்டும்

   நடைபோட்டு தீண்டித் தீண்டி - மேனி

               ஊடும்

இடைதொட்ட கூந்தல் ஓடி

   எடைத்தட்டாய் ஆடி ஆடி - விளை

               யாடும்

கடையோட்ட கண்கள் தேடி

   விடையின்றிக் கூடிக் கூடி - களம்

               ஆடும்

வளைபோட்ட கைகள் கொஞ்சி

   வடம்போட்டு கெஞ்சிக் கெஞ்சி - சிந்து

               பாடும் ! ( துளி )



மலர்த்தொட்டு மலரை விட்டு

   மயக்கங்கள் வந்து கண்டு - தல்

               ளாடும்

உலர்வாடை காற்றும் முட்டி

   உறக்கத்தைத் தட்டித் தட்டித் - துண்

               டாடும்

வளர்உந்தல் மெல்ல தூண்டி

   வருடங்கள் வேண்டி வேண்டி - நின்

               றாடும்


இளமொட்டு நெஞ்சில் விட்டே

   இணைந்தூறும் மின்னும் எண்ணம் - திண்

               டாடும் ! ( துளி )


                 - இராதே

திங்கள், 28 ஜூலை, 2025

தூரிகை தந்த ஓவியம்

 உருப்படி


தூரிகை தந்த ஓவியம்


        எடுப்பு


திட்டுத் திட்டாய் - வெள்ளை

      திட்டுத் திட்டாய்

விட்டு விட்டே - இடை

      விட்டு விட்டே

மொட்டு மொட்டாய் - முல்லை

      மொட்டு மொட்டாய்த்

தொட்டுத் தொட்டே - கோலத்

       தூரிகை தந்த ஓவியமே - எழில்

                பாவியமே - கலை

                 பூரதமே        ( திட்டு)                                                   



               முடிப்பு


கோடுகளே - வளை

      கோடுகளே

போடுங்களேன் - படம்

      போடுங்களேன்

தேடுங்களேன்  -  புகழ்

      தேடுங்களேன்

நாடுங்களேன் - நிலை

      நாடுங்களேன்   ( திட்டு)



வேய்ந்திடவே - காதல்

      வேய்ந்திடவே

சாய்ந்திடவே -  தோள்

      சாய்ந்திடவே

தோய்ந்திடவே - முத்தம்

      தோய்ந்திடவே

மேய்ந்திடுமே - இதழ்

       மெய்யுடலில்   ( திட்டு)



இமைகளிலே - நிறை

      இனிமைகளைச்

சுமைக்கையிலே - சுகம்

      சுவைக்கையிலே

அமைதியிலே - ஆழம்

      அளக்கையிலே

இமையுறுத்தும் - இன்பம்

      இதயத்திலே      ( திட்டு)



வந்தனளே - பெண்

      வந்தனளே

தந்தனளே - தன்னைத்

       தந்தனளே

சிந்தினளே - தேன்

      சிந்தினளே

 சிந்தையிலே - அமர்

       விந்தையிலே     ( திட்டு)


                       -  இராதே


தொங்கும் இலை !

 உருப்படி


தொங்கும் இலை !


            எடுப்பு


தொங்கும் இலையே !

        தொங்கும் இலையே !

    ஒற்றைத்  தோரணப்

          புதுமையா ?

பொங்கும் காதல்

        சின்னம் என்றே

    பொழியும் உணர்விழை

          வளமையா ?   ( தொங்கும் )


             தொடுப்பு

 எங்குமே எதிலுமே

        கலந்து விடாமல்

    ஏனோ தனிமையில்

          தவிக்கிறாய் ?

தங்கிடும் அழகினைத்

        தனியே காட்டிடத்

    தவழுங் காற்றிலே

          அலைகிறாய் !   ( தொங்கும் )


              முடிப்பு


தங்கம்உன் தளிர்மேனி

   தனித்தாடும் கலையேநீ

தொங்கட்டான் நகையோநீ

   சுழன்றாடும் இலையேநீ

மங்காத சிவப்போநீ

   மழைத்துளியின் திடலோநீ

சிங்கார எழில்ராணி

   சிரித்தாடும் மகிழ்வேநீ           (தொங்கும்)


சருகாக விழும்நாளில்

   சரித்திரம் இசைப்பாய்நீ

இறுகிய உளத்தினையும்

   இளக்கிடும் உன்சோகம்

கருவாகி உருவாகி

   கதைசொன்ன இலையேநீ

கருகாத நினைவாகி

   காலங்கள் வெல்வாய்நீ       ( தொங்கும்)


                 - இராதே


வியாழன், 24 ஜூலை, 2025

கொட்டும் மழை


 கொட்டும் மழை !


             எடுப்பு


குடையே ! குடையே !

                      நீ எங்கே ?

  கொட்டும் மழையில்

                      நான் இங்கே !     ( குடையே)


              தொடுப்பு


விடையின்றி கேள்விகள்

           துளைக்கிறதே !

   வீழ்ந்திடும் முகில்நீர்

            துவைக்கிறதே !  (குடையே)


             முடிப்பு

இடைவிடாது மழை

      தடைபடாது வென

இடிபட பொடிபட

        பொழிகிறதே !

அடைபடாது மனம்

        அளவிலாத படி

அவசர சரசத்தில்

           மகிழ்கிறதே !

நடையறாத இசை

        நடனமாது மிசை

நளினங்கள் சலனங்கள்

        தெறிக்கிறதே !

உடையிலாத இடை

      உரசியாடுஞ் சடை

உருகிட  உருகிட

        அழைக்கிறதே ! ( குடையே )


அசைவிலாடும் விழி

        அதனைமேவும் மொழி

அதகள ரதகளப்

        படுகிறதே !

பசையைப்போல இதழ்

        பருகுமுத்த முதல்

பசப்பிட பசப்பிட

        இழுக்கிறதே !

சுவைபடாத கனி

       சுவையுமாகும் இனி

சுகப்பட  அகப்பட

        விழைகிறதே !

விசையிலாடும் உளம்

        விரகம்பாடும் களம்

விறகெரி மெழுகென

        வழிகிறதே   ( குடையே)


               -  இராதே

ஞாயிறு, 13 ஜூலை, 2025

காந்தளூர் களிநடனம்

 காந்தளூர் களிநடனம் 


அகடுகளின் முகடுகளின் அணிமலையின் கூட்டம்


  அலைதிரளும் வெண்முகிலின் வழியுமெழிற் மூட்டம்

நகையுதிர பரிதிஒளி

நடனமிடும் ஆட்டம்

   நளினமுறு இளமஞ்சள் நிறமிளிரும் ஊட்டம்

வகைவகையாய் வரைமீதில் வண்ணமலர் நீட்டம்

  வரவேற்கும் வண்டிசையோ வண்ணத்தமிழ் நாட்டம்

தகதகிக்கும் கிளிபசுமை எதிரொளிக்கும் கோட்டம்

   தனியழகு காந்தளூர் கவலைதனை

ஓட்டும் !


                    - இராதே