இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 24 மே, 2026

தும்பி

 தும்பி


ஊடாடி விளையாடி

      ஊருணியில் ஊர்ந்தாடி

         ஓசையுடன் பறந்தா டுமே ;

      உரசியிலை, மலராடி

         ஊசியுடல் இறக்கையுடன்

            ஓடோடிச் சுழன்றா டுமே !



காடாடிக் கதிராடிக்

      கண்டயிடம் சதிராடிக்

         கார்முகிலைக் கொண்டா டுமே ;

      கண்களிணைக் கூட்டாகிக்

         கண்கவரும் காட்சியொளிக்

            கலைநுட்ப முகத்தோற் றமே !



கோடான கம்பியுரு

      குழலுருளை வடிவமாய்க் 

         கொசுக்களை உணும்  எம்பியே !

      கூடுக ளின்றியே

         குளநீரில் முட்டையிடக்


            குஞ்சுபொரி வளர்த் தும்பியே !


                       -  இராதே

புதன், 13 மே, 2026

சின்ன கண்ணன்

 சின்ன கண்ணன்

( காவடிச் சிந்து )

( நண்பன் பொறிஞர் இரா.கண்ணன்  60 ஆவது அகவைத் தொடக்க நாள் 14.05 2026 ஒட்டி எழுதிய காவடிச் சிந்து)


சின்ன கண்ணன் தூயநட்பை நாடுவான் - அன்பில்

                                                              கூடுவான் - மகிழ்வு

                                                              தேடுவான் - பண்பின்

    திளைப்போடே கேண்மைநோக்கி ஓடுவான் - பழகும்

        தெளிவூறியே பலவேளைகள்

        களிப்பூறிட களமாடிடும்

      சீரழகு மீனா மணாளன் ! - நனிப்

      பேரழுகுச் சூடுங் குணாளன் !                                                (1)



சின்ன கண்ணன் குறும்புசெயும் மாயங்கள் - புரளுந்

                                                                    தாயங்கள் - மாறுஞ்

                                                                    சாயங்கள் - பணிவு

    செழிப்புறவே மனமாற்றும் காயங்கள் - அறிவு

        திறமேவிட வளமாகியே

        அறமேதவழ் சிறப்பேறிய

      செப்பமுடை நண்பர்தமை ஆளுவான் ! - புகழ்த்

       தெப்பத்திலே மயங்கிடாமல் மீளுவான்!                          (2)



இன்னல்தரு மாந்தருக்குக் கூற்றிவன் - புதிய

                                                       மாற்றிவன் - அரிய

                                                       நாற்றிவன் - நாளும்

    இனிமைமிகப் பழகுதற்கு ஊற்றிவன் - துயர்

        இடர்மாய்ந்திடுஞ்  சுடரேயென

        படர்ந்தாடிடும் விளக்காகியே

     ஏற்றமிகுக் கட்டுங்கலைப் பொறிஞன் ! - தனி

      ஆற்றலுடை நுட்பம்வளர் அறிஞன் !                                  (3)



எண்ணங்களில் தூயசிந்தைத் தேனவன் - துள்ளும்

                                                                 மானவன் - ஒளிரும்

                                                                 வானவன் - நேயம்

    இன்பஞ்சூழும்


உறவுமுறை ஆனவன் - என்றும்

        ஈகையோடே இதயம்புக

        வாகையோடே வலமும்வர

      தப்பாமல் புன்சிரிப்பில் ஆழ்த்துவோம் ! - நாம்

       எப்பவுமே பிறந்தநாளில் வாழ்த்துவோம் !                  (4)

                                                                                       - இராதே

செவ்வாய், 12 மே, 2026

கோடங்கிப் பாட்டு

 கோடங்கிப் பாட்டு


குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்ல காலம் போகுது போகுது

சொல்லடி சொல்லடி தமிழ் மாகாளி

மெல்ல குறிசொல்லு மெய்யானத சொல்லு


தொல்லை தொலையாது துன்பம் துலங்குது

நல்லது போகுது வல்ல தமிழுக்கு

படிப்பும் வளரல தமிழும் செழிக்கல 

படித்த தமிழர்க்கு வேலை கிடைக்கல


தமிழைப் படிச்சவர் ஆட்சி ஆளல

நல்ல காலம் கெட்டு கிடக்குது

தமிழை இழிப்பவன் தலைவன் ஆகுறான்

பொழுதைக் கடப்பவன் பூமியை ஆளுறான்


பள்ளியில் எல்லாம் தமிழே ஒழியுது

படிக்க இந்தியே முந்தி நுழையுது

துள்ளிய செந்தமிழ்த் தூக்குல ஆடுது

தூமொழி காப்போ தூரமா ஓடுது


தமிழை மாய்க்கும் ஆட்சி வருகுது

தமிழைச் சாய்க்கும் சூழ்ச்சி பெருகுது

தண்டமிழ் புலவர் தன்னலம் ஓங்குது

கண்டிடும் விருதுக்கு ஆட்சியைத் தாங்குது


குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்ல காலம் போகுது போகுது

சொல்லடி சொல்லடி தமிழ் மாகாளி

மெல்ல குறிசொல்லு மெய்யானத சொல்லு


                           - இராதே


திங்கள், 27 ஏப்ரல், 2026

ஐயனார்

 ஐயனார்


(காவடிச் சிந்து)


எல்லைதொறும் ஐயன்செயுங் காவல் - ஏழை

    எளியோரைக் காப்பதில்பே ராவல் - ஊரின்

      ஏரிக்கரை காடுகண்மாய்

      நீர்நிலைகள் ஓடைவெளி

          எங்கும் - புகழ்

          தங்கும் !



தொல்லைகளை வேரறுக்கும் வீரம் - அஞ்சுந்

    துன்பங்களை விரட்டிடுந் தீரம் - இரவில்

      துள்ளு'சேமக் குதிரையேறி

      விள்ளுபெருஞ் சேனையோடு

          வேட்டை - அழியும்

          சேட்டை !              (1)



உருமி யடிக்கும்மேள தாளம் - உணர்வை

    உசுப்பிடுமே குலவை ஓலம் - நெடும்

      ஊர்வலமாய் ஊர்முழுதும்

      ஆர்வமுடன் கருப்பனோடு

          வருவார் - துணிவு

          தருவார் !


உருட்டும் மிரட்டும்வாளை யேந்தி - கெஞ்சி

    ஒண்டும் அடியார்க்கருளும் சாந்தி - தந்தே

      ஊட்டமுடன் ஓடித்தேடி

      ஆட்டமுடன் தீமையினைக்

          கொல்வார் - அறம்

          வெல்வார் !       ( 2)




பூரண புட்கலையோ டிணைந்தே - வரம்

    பொழிவதில் ஐயனாரும் முனைந்தே - இன்பம்

      பூணுதலில் பேணுதலில்

      வேண்டுபவர் வாழஅருள்

          புரிவார் - வாழ்த்து

          சொரிவார் !


பேரழகுக் 'குண்டலமும் குழையும்' - செவியில்

    பீடுடனே ஊஞ்லாடிக் குழையும் - பெருமை

      பேசுகிற கெடாமீசை

      கூசுகிற ஜடாமுடி

          காட்சி - காண

          மாட்சி !               (3)



'சங்கன்', 'சின்னான்','சோணை',நடுக் காடன்' - வீரன்

    'சமயன்','மூக்கன்','சுடலை மாடன்' - சீடர்

      தாங்கிடவே தோள்கொடுத்தே

      பாங்குடனே சுற்றும்'பரி

          வாரம்' - பண்பின்

          ஆரம் !


குங்கும திருநீரு சந்தனம் - பெற்றுக்

    கொண்டோர் பெறுமனமோ நந்தனம் - நாட்டார்

      குறைகளையும் பிணிகளையும்

      முறையறிந்தே முற்றுங்களை

          யெடுப்பார் - மகிழ்வு

          கொடுப்பார் !        (4)


                   - பொறிஞர் இராதே