இராதே

இராதே
eradevadassou

திங்கள், 27 ஏப்ரல், 2026

ஐயனார்

 ஐயனார்


(காவடிச் சிந்து)


எல்லைதொறும் ஐயன்செயுங் காவல் - ஏழை

    எளியோரைக் காப்பதில்பே ராவல் - ஊரின்

      ஏரிக்கரை காடுகண்மாய்

      நீர்நிலைகள் ஓடைவெளி

          எங்கும் - புகழ்

          தங்கும் !



தொல்லைகளை வேரறுக்கும் வீரம் - அஞ்சுந்

    துன்பங்களை விரட்டிடுந் தீரம் - இரவில்

      துள்ளு'சேமக் குதிரையேறி

      விள்ளுபெருஞ் சேனையோடு

          வேட்டை - அழியும்

          சேட்டை !              (1)



உருமி யடிக்கும்மேள தாளம் - உணர்வை

    உசுப்பிடுமே குலவை ஓலம் - நெடும்

      ஊர்வலமாய் ஊர்முழுதும்

      ஆர்வமுடன் கருப்பனோடு

          வருவார் - துணிவு

          தருவார் !


உருட்டும் மிரட்டும்வாளை யேந்தி - கெஞ்சி

    ஒண்டும் அடியார்க்கருளும் சாந்தி - தந்தே

      ஊட்டமுடன் ஓடித்தேடி

      ஆட்டமுடன் தீமையினைக்

          கொல்வார் - அறம்

          வெல்வார் !       ( 2)




பூரண புட்கலையோ டிணைந்தே - வரம்

    பொழிவதில் ஐயனாரும் முனைந்தே - இன்பம்

      பூணுதலில் பேணுதலில்

      வேண்டுபவர் வாழஅருள்

          புரிவார் - வாழ்த்து

          சொரிவார் !


பேரழகுக் 'குண்டலமும் குழையும்' - செவியில்

    பீடுடனே ஊஞ்லாடிக் குழையும் - பெருமை

      பேசுகிற கெடாமீசை

      கூசுகிற ஜடாமுடி

          காட்சி - காண

          மாட்சி !               (3)



'சங்கன்', 'சின்னான்','சோணை',நடுக் காடன்' - வீரன்

    'சமயன்','மூக்கன்','சுடலை மாடன்' - சீடர்

      தாங்கிடவே தோள்கொடுத்தே

      பாங்குடனே சுற்றும்'பரி

          வாரம்' - பண்பின்

          ஆரம் !


குங்கும திருநீரு சந்தனம் - பெற்றுக்

    கொண்டோர் பெறுமனமோ நந்தனம் - நாட்டார்

      குறைகளையும் பிணிகளையும்

      முறையறிந்தே முற்றுங்களை

          யெடுப்பார் - மகிழ்வு

          கொடுப்பார் !        (4)


                   - பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக