இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 7 நவம்பர், 2021

நிலவு

 நிலவு

  ( காவடிச் சிந்து )

 ( பாதி ராத்திரி வீட்டு மெட்டு ) 

 நீல வானத்தில் மாலை யில்வந்து   

நின்றி டும்வெள்ளித் தட்டு - மஞ்சு 

 நெற்றி யில்இட்டப் பொட்டு - மின்னல் 

 நீச்ச லில்ஒளிர் வட்டு - ஒளி 

 நீட்டிக் கூட்டிக்கொண் டேகி டநீரில் 

 நெகிழுதே அல்லி மொட்டு ! 


 கால மும் இர வோடு தான்உன்னை 

 காண்ப தேகளிப் பாகும் - காளை, 

 கன்னி யர்மனம் நோகும் - உந்தன் 

 கருணை யால்இடர் போகும் - கவி 

 கற்ற பாவலர் கற்ப னைக்கும்உன் 

 காட்சி யேபரி சாகும் ! 


 தேனி லாவிலே காத லார்மனம் 

 செம்மை யாயின்பம் ஊட்டும் - இணை 

 தீதி லாச்சுவை கூட்டும் - மகிழ் 

 சிந்து பாவியம் தீட்டும் - மெல்ல 

 தேயு றும்பிறழ் உள்ளத் தீச்சலை 

 செப்ப மாய் அற ஓட்டும் ! 


 வானி யங்கிடும் வெண்ணி லாவந்து 

 வருட வேகுளிர் வீசும் - நோக்க 

 வாட்ட மாய்க்கண்கள் கூசும் - கேட்க 

 வண்ட மிழ்மொழி பேசும் - கலை 

 மாற்றத் தால்வரு மேற்ற தாழ்வுகள் 

 மாற வே போகும் மாசும் ! 


 தேய்ந்தி ளைத்துநீ நாள்வளர் பிறை 

 தேர்ந்த கோளுறு காலம் - புவி 

 சேர்ந்த ஓட்ட 'மாய் மாலம்' -- அந்தி 

 தீண்ட லில்இடும் ஆலம் - வெய்யோன் 

 சிந்தி டும்ஒளி இந்து மேவிட 

 சீர்பெ றும்அருங் கோலம் ! 


 பாய்ந்தெ ழுங்கடல் ஓய்ந்தி டும்அலை 

 பாரி னில்உந்தன் ஆர்ப்பு - விசை 

 பரவ லில்வரும் ஈர்ப்பு - ஓதம் 

 பங்கி டும்நீர் சேர்ப்பு - நிலாப் 

பந்தி டும்விளை யாட்டி னால்நிகழ் 

 பாரு றும்வினை வார்ப்பு ! 

 பூமி யைச்சுழல் மைய மாய்க்கொண்டுப் 

பொற்பு றுந் துணைக் கோளாம் ! - பிறை 

 போலு ரு அரி வாளாம் - வான் 

 பூ நி லாக்குறை சூளாம் - மதி 

 பூர ணவடி வாகி டும்நிலை 

 பூணு தல்திரு நாளாம் ! 

 பாம ரர்க்கல் லல்தந்தி டும்பகல் 

 பைச லாகும்'மை' காட்டில் - எழும் 

பால்நி லாஒளி நாட்டில் - சுடர் 

 பாய்ச்சி டுங்குடி வீட்டில் - வடை 

 பாட்டி சுட்டிடுங் காட்சித் தோன்றலோ 

 பார்வை மாயம்கண் கூட்டில் ?

                                                           - இராதே


  சூள் : சாபம் , பொற்பு : அழகு

சனி, 6 நவம்பர், 2021

பாரதிதாசன்

 பாரதி தாசன் 

( காவடிச்சிந்து )

 ( கன்னல் சூழ்பழ னம்புடை சூழ்கழு ) 

 தென்றல் சேர்நில வின்குளிர் சேர்மன 

  தேரி னில்வரும் மாக்கவி ராசனே ! - பாடல் 

  வாரி யெங்கும்வீ சும்மொழி நேசனே ! - எழில் 

    செந்தமிழிசை எம்பிநின்திரு 

     உந்துதலுற நம்பிக்கையொடு 

   சேவை செய்கவி பாரதி தாசனே ! - தமிழ்

   நாவை வைத்துல கையாளும் ஈசனே !


 இன்னல் சூழ்உழ லும்இனஞ் சூழ்தமிழ் 

   ஏற்ற மும்பெற 'பா'உரை நேயனே ! - பகை 

  தோற்க வே'கொலை வாள்'விடு மாயனே ! - தவ 

    இன்பமாத்தமிழ் எங்கும்மேவிட

     நன்குசங்குமு ழங்கவேயொலி 

   எட்டுத் திக்குமி சைத்தநல் தூயனே ! - நனிச் 

   சொட்டும் சொற்றமிழ்ச் சொல்லுஞ்சொல் வாயனே ! 


 பைந்த மிழர்ப் பெருமைகள் தேடியே

  பாவேந் தரென்றச் சிறப்பைச் சூடியே - பெற்ற 

  பட்டங் களாமோ எத்தனைக் கோடியே - தேன் 

    பாகெனக்கவி யோஇனித்திடும்

    வாகெனமன மோசுவைத்திடும்

     பாண்டி யன்பரி சாங்கவி பாடியே - மொழித்

     தாண்ட வமாடு தாம்மகிழ்ந் தாடியே


 சிந்த னைக்குளே 'அழகின் சிரிப்பாம்'

சிந்த னைக்குளே 'அழகின் சிரிப்பாம்' 

   சீர்மை குடும்ப விளக்கின் குறிப்பாம் ! - இல்லத் 

  தீமை அப்பு'மி ருண்டவீடு' தெறிப்பாம் ! - கவி 

    தேறலூறிடும் பாடலாயிரம் 

    மீறவேயிலை 'பா' இலக்கணம்

  செப்பு வேர்த்தமிழ்ப் புரட்சி நெருப்பாம் ! - கனக 

  சுப்பு ரத்தினம் தமிழர் இருப்பாம் ! - இராதே

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

சொற்கேட்டல் இனிது

 சொற்கேட்டல் இனிது


படுக்கையில் கால்கை ஆட்டிப்

   படிகளில் தவழ்ந்தே யேறித்

தடுக்கியே விழுந்து வாறித்

   தத்தியே நடக்கக் கற்று

அடுப்படி நுழைந்து சுற்றி

   ஆக்கிய சோற்றைக் கொட்டிக்

கொடுக்குகள் அடிக்கும் கொட்டம்

   குளிருதாம் மனத்தில் இன்பம் !



அடுக்கிய உடைகள் பொம்மை

   அனைத்தையும் அள்ளி வீசி

இடுக்கிலே புகுந்து வந்தே

   எட்டியே குறும்பாய்ப் பார்த்துத்

துடுக்காக ஓடி யாடித்

   துள்ளிய துள்ள லோடே

சொடுக்கிடும் நொடிக்குள் ளாக

   சுழன்றிடும் மழலை இன்பம் !



சுண்ணாம்புச் சுவற்றி லெல்லாம்

   சுரண்டியே கிறுக்கி வைத்துக்

கண்ணாடிக் கதவைத் தட்டிக்

   கற்கண்டாய்ச் சிதற விட்டுப்

பின்னாடி ஒளிந்து நின்று

   பிறைபோல எட்டிப் பார்த்து

முன்னாடிக் குழையும் பிஞ்சின்

   முகத்தாடல் கொள்ளை இன்பம் !



அன்னைமுன் தானை பற்றி

   அடிக்கடி காலைச் சுற்றிக்

கண்ணாக வளர்க்குந் தந்தை

  கைகளில் பிடித்துத் தொங்கி

வண்ணமாய்க் குழைந்து  கொஞ்சி

   வாயார முத்த மிட்டே

எண்ணத்தை ஆளும் செல்வ

   இளம்மழலைச் சொற்கள் இன்பம் !



தன்மக்கள் தீண்டல் இன்பம்

   தரத்தாலே உயர்ந்த தென்பார்

வெண்சங்கும் குழலும் யாழும்

   வெற்றிசைதான் மக்கள் முன்பே

இன்சொல்லாய் மழலைச் சொற்கள்

   இனிக்கின்ற சொற்கள் தாமே

இன்பமுறு மக்கள் பேறே

   இனிக்கின்ற தென்பான் ஐயன் !



இன்னிசையில் உலகம் நோக்கி

   இயம்புகிற சொற்கள் யாவும்

மண்ணசைக்கும் மழலை முன்னர்

   மண்டியிடும் சொற்க ளாமே

விண்ணுயர நின்ற ஐயன்

   விருப்புடன் மக்கள் பற்றிக்

இன்சொல்லை செவிக்குள் அந்த

    இனிதான குறள்தந் தானே !

                                                          -  இராதே