இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 17 ஜூலை, 2012

சரித்திரத் தேர்ச்சி கொள் !

தங்கத்தைத்     தகரம்     என்பார் ;

               தறுதலையைத்     தலைவன்     என்பார் ;

வெங்காயம்     உருளை     என்பார் ;

               வேரினை     விழுதே     என்பார் ;

திங்களைப்     பரிதி     என்பார் ;

               தீம்பழம்     கசப்பே     என்பார் ;

இங்கிவர்     சொல்வ     தெல்லாம்

               இயங்கிடா     அறிவி     னாலே   !                            ( 1 )



பொங்குமா     அறிவு     வேண்டின்

               புதையலாம்     கருத்துச்     செல்வம்

தங்கிய     சரித்தி     ரத்தைத்

               தரணியில்     படிக்க     வேண்டும் ;

எங்கெலாம்     கலைகள்      உண்டோ

               எதனையும்     விட்டி     டாமல்

அங்கெலாம்     அலைந்து     சென்றே

               அதனையும்     கொணர்ந்து     சேர்ப்போம்   !      ( 2 )



பெரிதினும்     பெரிது     கேட்போம்

               பெருமையே     வாழ்கை     யாக

அரிதினும்     அரிய     கல்வி

               அன்பினில்     இணைந்து     கேட்போம்

விரிகதிர்     போல     ஞானம்

               வியன்கடல்     போல     பண்பு

தரித்திட     நிலத்தில்     நாமே

               சரித்திரத்     தேர்ச்சி     கொள்வோம்   !                ( 3 )



கற்றலின்     தெளிவு     காணும் ;

               கற்பனைத்     திறமும்     மேவும் ;

பற்றது     புரிந்து     போகும் ;

               படிப்பது     விரிந்து     நீளும் ;

எற்றிடும்     குணங்கள்     மாறும் ;

               எஃகுபோல்     வலிமை     சேரும் ;

நற்றவ     உலகில்     நாமும்

               நல்லதோர்     இடத்தில்     நிற்போம்   !                ( 4 )



வாழ்ந்தவர்     சுவடு     தானே

               வரலாற்றுப்     பதிவாய்     மாறும் ;

ஆழ்ந்த்தைத்     தெரிந்து     கொண்டால்

               அறிவியல்     புரிதல்     கூடும் ;

சூழ்ந்திடும்     துன்பம்     நீக்கித்

               துரத்திடத்     தீர்வு     தோன்றும் ;

பாழ்படும்     நாட்டின்     போக்கைப்

               பக்குவ     வழியில்     மாற்றும்   !                            ( 5 )



ஆதலால்     கற்பீர்     நன்றாய்

               அகிலத்தின்     சரித்தி     ரத்தைக்

காதலாய்     உருகிக்     கற்றுக்

               காப்பீரே     குவல     யத்தை   !

மாதரார்     உயர்வு     கல்வி

               மதிப்பையும்     கொடுக்கும்     இந்த

ஓதலை     ஒழுங்காய்ப்     பெற்றே

               உயருக     புவியில்     நீரே   !                                    ( 6 )



தூரத்தில்     ரஷ்ய     நாட்டில்

               துளிர்த்தெழு     புரட்சி     தன்னை

நேரத்தில்     பாக்க     ளாக்கி

               நேர்த்தியாய்ப்     படையல்     தந்தான் ;

தாரணி     குறித்து     நமக்குச்

               சரித்திர     கதைகள்     சொன்னான் ;

பாரதி     கருத்து     வோட்டப்

               பாதையில்     நடந்து     வெல்வோம்   !                ( 7 )



பாரதிர்     புரட்சி     சொன்ன

               பைந்தமிழ்த்     தேனீ     எங்கள்

பாரதி     கூறும்     நல்ல

               பண்பினை     வளர்த்து     கொள்வோம்   !

சாரதி     அவனின்     கூற்றாம்

               சரித்திரம்     தேர்ந்தே     கொள்கைத்

தேரதில்     பவனி     வந்து

               தேசத்தை     மீட்போம் !    காப்போம்   !                ( 8 )

                                                                                        -இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக