'நீ தான் மணல்'
அறைந்தும் சொல்கிறது
அடித்தும் சொல்கிறது
பாறையை
அலைகள்
உணர்த்தலிலும்
உணர்தலிலும்
ஒளிர்ந்து சிரிக்கிறது
உண்மை
- இராதே
'நீ தான் மணல்'
அறைந்தும் சொல்கிறது
அடித்தும் சொல்கிறது
பாறையை
அலைகள்
உணர்த்தலிலும்
உணர்தலிலும்
ஒளிர்ந்து சிரிக்கிறது
உண்மை
- இராதே
இழந்த துணைக்காய்
ஏங்கி இடந்தேடி
அலைகளின் விளையாட்டில்
திக்குமுக்காடி
கரைக்கும் கடலுக்குமாய்க்
கடலாடிக் கசந்துபோய்க்
கரையில் தனித்து
யாருமற்றுக் காட்சிபடுகிறது
ஒற்றைச் செருப்பு
யாரறிவரோ தொலைந்த
துணையின் முகவரி ?
கம்பளிப்பூச்சிகள்
வழிமொழிவு
பட்டாம்பூச்சிகள்
கொதிநீரால் கூடுகளகன்று
நூல்கொடுக்க உயிர்மொழியும்
பட்டுப்பூச்சிகள்
முனகல்களில் உடலருவும்
பட்டாடைகளின் மினுக்கலில்
ஈரம் கசியா
இயற்கை பொழிவுகள் !
- இராதே
நட்பெனும் சிதம்பர நாதம் !
நட்பெனும் சிதம்பர நாதம் ! - அதன்
நற்றமிழ் ஓதிடும் தத்துவ வேதம் !
சட்டென இசைத்திடும் கீதம் ! - நேய
சாரத்தை வகுத்திட நடந்திடும் பாதம் !
தித்திக்குந் தேன்சுவை பேச்சு ! - அதில்
தீந்தமிழ் சிறப்புற எழுந்திடும் மூச்சு !
எத்திக்கும் முழவிடும் வீச்சு ! - நமை
இயல்பிலே களிப்புற மயக்கிட லாச்சு !
அன்பிலே திளைத்திட செய்வான் ! - அவன்
ஆர்த்திடுந் தமிழாலே உள்ளத்தில் உய்வான் !
பண்பாலே நட்பினைக் கொய்வான் ! - ஆழப்
படித்ததைப் பாரினில் பயனுற பெய்வான் !
இன்பன் சிதம்பரம் வாழ்க ! - நங்கை
இணையோடே என்றென்றும் இன்பமே சூழ்க !
நன்றாய் மகிழ்வினில் மூழ்க ! - நாளும்
நன்மைகள் பெற்றேநீ நலங்களில் ஆழ்க !
- பொறிஞர் இராதே
முன் விரிகிற
வாழ்க்கை
ஊர்ந்து நெளிகிற
உண்மைகள் பின்னால்
விழிபிதுங்கி
வழித்தொலைத்து நிற்கும்
கனவுகள்
அன்றிலிருந்து இன்றுவரை
வளைய வளைய
தேய்ந்து தேய்ந்து இளைக்கும்
நினைவுகள்
ஒவ்வொரு புரிதலுக்குள்
முளைவிடும் பட்டறிவு
பயனுறும் முன்
அடங்குகிறது மூச்சு !
- இராதே
தமிழா ! தமிழா !
தமிழா ! தமிழா ! இனி உன் பொறுமை
மிகுந்தால் மொழியும் அழியும் !
அழியும் விளிம்பில் நெளியும் மொழியை இனி
உன் விழிப்பே தடுக்கும் !
மொழியின் தினவே பெருகும் பெருகும்
அடிமை தளையை உடைக்கும் ! (தமிழா)
மொழி தீமைகள் மீறுதடா ! இய லாமைகள்
ஊறுதடா !
மசியாத் தமிழுமே அசையா தென்பது
வாடிக்கையானதடா !
பிற திணிப்புகள் என்பதும் விரிப்புகள் என்பதும்
வேடிக்கையானதடா !
கடுஞ் சாடல்களே இனி முடிவுகள் என்பது
சூட்டிகையானதடா !
(தமிழா)
புகழ் சூடிய செந்தமிழே ! திகழ் கண்டங்கள்
வென்றவளே !
பெருந் தோல்வியிலா நல் வேள்விகளால்
திறம் மேவிய பொற்றமிழே !
பகை ஆயிரம் ஆயிரம் கூடியே நின்றினும்
நற்றமிழ் வென்று விடும் !
அட ! நாளுமே நம்மொழி நாளைய உலகினைக்
கைக்குளே கொண்டு விடும் !
(தமிழா)
- இராதே
கண்ணின் கருவிழி காமன் பகடையாம்
பெண்டீர் உருட்ட பெருகிடும் - திண்காதல்
பன்னீர் மழையும் பகிருமே இல்வாழ்வில்
இன்பம் விளையும் இனி
சுடரும் விழியால் சுடுவாள் சுவையாய்த்
தொடரும் மொழியால் தொடுவாள் - படரும்
கொடிஇடைப் பாமகளே கொல்லும்நின் பார்வை
அடியால் அளந்தே னடி
சிமிட்டா விழிக்குள் சிக்கித் தவிக்க
நிமிட்டும் மனமோ நினைக்க - உமிழ்நீர்
சுரக்கச் சுரக்கச் சுவைபடு காதல்
அரங்கம் பயில அழை
என்னவளே ! வண்ணயெழில் ஏந்திழையாய் ! வாய்மலர்ந்தே
புன்னகையைப் பூக்கும் புதுமலரே ! - கண்ணெதிரே
கண்கவரும் ஒவியமாய்க் காட்சியொளிர் அன்பனெனை
இன்பமுடன் சேர்வாய் இனி-
இராதே