மௌனம் வெல்லும் !
அந்திவரும் செவ்வானில் அரைத்தமஞ்சள் ஆரம்
உந்திவரும் விழியசைவில் ஒளிர்க்காதல் வீரம்
முந்திவரும் முகத்தழகில் முத்திதழின் ஓரம்
சிந்திவரும் சந்தமெலாம் செந்தமிழின் சாரம்
பாலழகு மேனியிலே பருவமழை கண்டு
மேலழகு மூச்சுயெழ விம்முவதும் உண்டு
நூலளவே இடையளவு நொடிவதிலே விண்டு
காலழகுப் பாடாத கவிஞனில்நான் மண்டு
முத்தமழை முகில்வரவில் மோகமயி லாடும்
வித்தையெழ விழிதிரைகள் மின்னலென மூடும்
தத்தைமனந் தாவிவர ' தந்தனத்தோம் ' போடும்
பத்துவிரல் தொட்டணைக்கப் பஞ்சணையில் தேடும்
பார்வையது பட்டவுடல் பரவசத்தில் துள்ளும்
வேர்வையது பொங்கியெழ வேதனையைத் தள்ளும்
தேர்ந்தசுகம் கண்டதிலே சேர்ந்தகதை சொல்லும்
வார்த்தைவழித் தேடுதலில் மௌனநிலை வெல்லும்
- பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக