இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 19 ஜனவரி, 2018

வெறுமை

அடிவானத்தை
வருடியபடியே
மேல்நோக்கிப் படரும்
பார்வை
நிலவொளியின்
பொழிதலில்
மூழ்கித் தவிக்கும்
நினைவுகள்
உருண்டு வந்து
உலர்க்கோடுகளாய்க்
கண்ணீர்ப் பயணத்தின்
பாதை
உதடுகள் நனைத்த
கரித்த உவர்ப்புச்
சுவை
ஆரவாரமும்
அசைவுமின்றி
கவனித்தபடி
தன் இருத்தலைப்
பதிகிறது
வெறுமை
- இராதே

நாட்காட்டி

காற்றின் இருத்தலைத்
தாளின் அசைவுகளால்
உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது
ஒவ்வொரு நாள்
கிழிபடும்போது
365 முறை
உணர்த்தப்படுகின்ற
மரணங்கள்
கிழிவதினால்
தேய்கிறதா ? வளர்கிறதா ?
நுழைய வைக்கும்
பட்டிமன்றத் தலைப்பு
ஒவ்வொரு கிழிதலிலும்
ஒரு நாளை வளர்த்துதான்
போகிறது
ஒவ்வொரு தேய்தலிலும்
ஒரு பட்டறிவை
விட்டுத்தானே செல்கிறது
இளைத்து வந்தாலும்
நினைவுகளைத் தொகுத்துதானே
வருகிறது ?
சிலருக்கு அது படம்
சிலருக்கு அது பாடம்
கிழிபட்டு உதிர்ந்தாலும்
ஆண்டொன்றைப்
பெருமையோடுக்
காட்டி மாய்கிறது
நாட்காட்டி
- இராதே

சினம்

என்னைத் தெரிந்தவர்களுக்கு
நான் கோபக்காரன்
ஆனால் பாருங்கள்
யாரும் அச்சப்படுவதில்லை
என்னை அறிந்தவர்கள்
எப்போது கோபப்படுவேன்
என்ற தேர்வு வென்று
கைத்தேர்ந்தவர்களாகி
விட்டனர்
கோபந்தானே எனக்கு
பலமின்மை
அவர்களுக்கு
பலம்
இயலாமை புலப்படும்
கோபத்தைப் புரிந்த
தந்தரசாலிகள்
சாதிக்கின்றனர்
எப்போது அறுபடும்
இந்த கோபம் ?
உடன்பிறந்ததாயிற்றே
விடுமா உடனே ?
குணத்தையுமா
விடச் சொல்கிறீர் ?
குணம் வேண்டின்
கோபம் இருந்து விட்டுப்
போகட்டுமே
- இராதே

நியாத்தை யாரிடம் சொல்ல ?

உண்மையைச் சொன்னால் உதைப்பார்களே
பொய்யோடே பழகியவர்கள்
பூட்டிவைத்துப் பூட்டிவைத்துப்
புழுத்துபோன உண்மைகள்
நிகழ்காலத்தில் செல்லாதாகிக்
கடந்தகாலத்துப் பெருமைகளாய்
வலம் வருகின்றன
உயரே உயரே பறந்தாலும்
ஊர்க்குருவிதானே பொய்
உண்மைதானே பருந்து
மழை பொய்க்கிறது ஆனாலும் பெய்கிறது
ஆருடம் பொய்க்கிறது ஆனாலும் பலிக்கிறது
இவைகள் பொய் தரும் நம்பிக்கை
அடுத்தவன் உழைப்பைச் சுரண்டுவோம்
ஆனாலும் பொதுமை பேசுவோம்
அடுத்தவன் பணத்தில் குடிப்போம்
ஆனாலும் மதுவை ஒழிப்போம்
உண்மை தரும் நம்பிக்கையின்மை
போலிக்குப் போலியானதாய்
உண்மைக்கும் உண்மை உறைந்துகிடக்கிறது
நியாயத்தை யாரிடம் சொல்ல ?
- இராதே

மழலைபருவம்

தென்னங்குச்சி
சுருக்கில் பிடிபட்டுத்
தொங்குகிறது
கல்லடிப் பட்டுத்
துடிதுடிக்கும்
ஓணான்
ஏசுவுக்கு
கொட்டாங்குச்சியில்
...நீர்க் கொடுத்ததாம்
அல்லாவை
தலையாட்டிக்
காட்டிக் கொடுத்ததாம்
மனத்தில்
சொல்லடிப் பட்டு
வளர்கிறது
மழலைப் பருவம்
                                   
- இராதே

புதன், 10 ஜனவரி, 2018

காக்கா முட்டை

மழையில்
அம்மணமாய்க் குளிக்கும்
மரங்கள்
காற்றின்
தலைத் துவட்டலில்
சிந்திச் சிதறும்
துளிகள்
கிளைத் தவழும்
கூட்டிலிருந்து
விழுமா முட்டை ?
கவலையில்
கரைகிறது
காகம்
- இராதே

கோலங்கள்

நீர்த் தெளித்துக்
கூட்டித் தள்ளி
அழகு ஊறக்
காத்திருந்து
புள்ளிகளால்
முத்தம் பெற்று
வளைந்து நெளிந்த
கோடுகளால்
வெட்கப்பட்டு
மார்கழி பூச்சூடும்
வாசலிலே
கால்பட்டு
அழிகின்றன
கோலங்கள்
                                       
- இராதே