இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

தோழா நேர்கொள் ! - கண்ணி

உள்ளத்தில்  கள்ளம்  வைத்தே
     உதட்டினில்  வெல்லம்  வைத்தே
     ஊர்கூட்ட  நினைப்பா  ரடா - தோழா
     உண்மைகள்  மறைப்பா  ரடா !


வள்ளுவன்  பெயரைச்  சொல்லி
     வாய்கூச  பொய்கள்  சொல்லி
     வலைகளை  விரிப்பா  ரடா - தோழா
     வஞ்சக  நெஞ்ச  ரடா !


கொள்கைமான்  காந்தி  யாரைக்
     கொன்றவன்  கோட்சே  வுக்குக்
    கொடிகட்டி  மகிழ்வா  ரடா - தோழா
    கொலைவெறிக்  கூட்ட  மடா !


முள்மன  வேலி  யிட்டு
     முடக்கிடும்  மடமை  பேணி
     முரண்பகை  வளர்ப்பா  ரடா - தோழா
     மூட்டித்தீக்  காய்வா  ரடா !


மக்களைத்  தூண்டி  விட்டு
     மதவாதம்  நாளும்  பேசி
     மகிழ்வினில்  திளைப்பா  ரடா - தோழா
     மதவெறி  அரக்க  ரடா !


வக்கனை  கூத்தும்  ஆடி
     வகைவகை  கதைகள்  கூறி
     வாக்குகள்  சேர்ப்பா  ரடா - தோழா
     வழிப்பறி  கும்ப  லடா !


முக்கண்ணன்   மாதோர்  பாகன்
     முழுக்கதை  குறைகள்  கூறி
     முடக்கினர்  எழுத்தை  யடா - தோழா
     மௌடிக  கூட்ட  மடா !


எக்காள  மிடுவோர்  தம்மை
     எதிர்த்திட  ஒன்றாய்க்  கூடி
     இயங்கிட  தோள்கொ  டடா - தோழா
     எதிரியை  நேர்கொள்  ளடா !
                                                                             -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக