இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

 மழையே வாழ்க !

( அமுதே ! தமிழே ! )
மழையே ! மழையே ! அழகிய
மழையே ! பெருமழையே !
மழையே ! மழையே ! அழகிய
மழையே ! பெருமழையே !
மழைதரும் நீர்வளம் பார்!
மழைதரும் நீர்வளம் பார்!
மனதினில் மகிழ்வினில் ஆழ் !
மனதினில் மகிழ்வினில் ஆழ் !
மழையே நாளும் நீ வாழ்க !
மழையே நாளும் நீ வாழ்க ! ( மழை )


வானூறும் நீராரம் ! - வயல்
வெளியின் ஆதாரம் !
வானூறும் நீராரம் ! - வயல்
வெளியின் ஆதாரம் !
வரு மழையே ! பெரு மழையே !
வளமையினைத் தரு மழையே !
வான் மெழுகாய் உருகும் பெருகும்
அதில் உயிர்கள் மகிழ்ந்து போகும் ;
வான் மெழுகாய் உருகும் பெருகும்
அதில் உயிர்கள் மகிழ்ந்து போகும் ;
பூ மயிலும் கொண்டாடும் மழையே
நாளும் நீ வாழ்க ! ( மழை ) ( 1 )


அன்றல்ல இன்றல்ல என்றென்றும்
நீர்வளங்கள் ;
அன்றல்ல இன்றல்ல என்றென்றும்
நீர்வளங்கள் ;
மழை பொழிய நிரம்பி எழும் !
மலை யருவி பெருகி விழும் !
நீர்நிலையும் நிலமும் உழவும்
நீயிருந்தால் மரணமேது !
நீர்நிலையும் நிலமும் உழவும்
நீயிருந்தால் மரணமேது !
பொன்னுலகில் நீர்ப்பாய மழையே
நாளும் நீ வாழ்க ! ( மழை ) ( 2 )


பெய்யாமல் தீங்கிழைக்கும் பெய்திங்கே
நன்மை தரும் !
பெய்யாமல் தீங்கிழைக்கும் பெய்திங்கே
நன்மை தரும் !
நிறைமழையாய்ப் பொழிந்தே எழும் !
குறைமழையாய் ஓய்ந்தே விழும் !
உயிருணவும் உடையும் உயர்வும்
நீயிருந்தால் உலகிலுண்டு !
உயிருணவும் உடையும் உயர்வும்
நீயிருந்தால் உலகிலுண்டு !
மண்ணுலகில் நீர்வாழ மழையே
நாளும் நீ வாழ்க ! ( மழை ) ( 3 )
- இராதே

Like
Comment
Share

 தீ நுண்மி ( கொரோனா )

( காவடிச் சிந்து )

( பவணக்கி ரியதனுள் தானே - மெட்டு )
பரவும்நுண் ணுயிர்ச்செய லாலே ! - மண்ணின்
மேலே ! - படு
பாழும்நோயொடு மேலுந்துன்புற
வாழும்பேருயிர் போகுமென்பதை
பாராய் ! - கூட்டம்
சேராய் !

கரவுப்ப கைமுடிக்கும் நோயே ! - புன்மை
தீயே ! - வழி
காணவேஒரு ஆளுமிங்கிலை
வீணதாய்ப்பொருள் போவதெங்கென
காணோம் ! - ஊமை
யானோம் !

இருமல்ச ளிவருமப் போதே ! - நாள்தள்
ளாதே ! - காய்ச்சல்
ஏற்றமாய்மிக மூளுந்தீங்கினை
மாற்றவேமருந் தோடுவாழ்வதன்
ஈடே ! - சொல்வ
தேடே !
அருகும்நு ரையீரலி னூடே ! - நுண்மி
கூடே ! - புக
ஆட்டமாடிட மூச்சுந்தேய்பட
ஓட்டமேயற மாயுமாமுடல்
ஆவி ! - திணறல்
மேவி !

விலகித்த னித்திருப்ப தாமே ! - நன்மை
யாமே ! - இதை
வீட்டிலேஅரங் கேற்றிப்பார்த்திட
நாட்டிலேதின ஊன்றிமேவிடு
வாயே ! - நிற்கும்
நோயே !

நிலவும்உ யிரிழப்பும் போமோ ? - நம்ப
லாமோ ? - மக்கள்
நேர்த்தியாய்நெறி மீறிடாதுடன்
தீர்வுநோக்கிடல் கானல்போலுள
நீரோ ? - வெல்லு
வாரோ ?

திடமற்றஎ திர்ச்சத்தில் லாதே ! - உடல்
மீதே ! - மிக்க
தீரமாயுடன் ஏகியேஉயிர்
சோரவேபிணி கோரத்தாண்டவ
தீதே ! - சாவின்
தூதே !

நடமிடுமு ளத்துணிவி னோடே ! - மாய்ப்போம்
கேடே ! - தொற்று
நாளுமேபர வாமல்செய்திட
ஆளுமையுடன் நோயைவீழ்த்தினி
நாமே ! - மகிழ்
வோமே !

- இராதே

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

 கண்ணதாசன்

(காவடிச்சிந்து)


தேட லேபணியென் றாடத் தொழுந்தமிழ்
நேசனைக் - கண்ணனவன்
தாசனை - எண்ணத்
திகட்டத் திகட்டப்பாயும்
அகமே வும்புகழ்ஞான வாசனை !


பாட லின்பமிகுந் தோட உருளுந்தே
ரோட்டமே !- சந்தத்தின்பந்
தாட்டமே ! - எழுத
கூடும் மயிலிறகால்
ஓடு மேதமிழ்ப்பகைக் கூட்டமே !


வெள்ளித் திரையினூடே துள்ளித் தி்ரியுமவன்
பாடலே ! - இசைத்தேந்தமிழ்ச்
சூடலே ! - மாந்தம்
வெல்லுந் தத்துவங்கள்
சொல்லும் வையகத்தின் சாடலே !


அள்ளச் சுரப்பினுள்ளே மெல்லப் பெருகுங்கவித்
தேறலே ! - அறிவினுயர்ச்
சீறலே ! - சொற்கள்
மேவும் பண்முகிலால்
தூவும் செம்மொழியின் தூறலே !


கம்பன் கவிநயத்தில் தெம்பி லுளந்திளைத்
சிந்தையே ! - அருந்தமிழின்
சந்தையே ! - சித்தர்
காவி யம்பலகற்றுப்
பாவில் கொடுத்ததுன்றன் விந்தையே !


வம்பாம் அரசியலில் எம்பிக் குதித்தெழுந்த
தீரரே ! - அதிர்ந்தொலிர்ந்த
சூரரே ! - தமிழ்
வாழ வேஉயிரென்று
வேழ மாய்மொழிகாத்த வீரரே !


மங்கை மார்கள்மதுரங்கள் பட்டறிவுச்
சொல்லியே - வீசுங்கருத்து
மல்லியே ! - மன
வாசக் கண்ணனிடம்
பாசத் துடன்படர் வல்லியே !


சந்த யாப்பினிலும்சிந்து யாப்பினிலும்
மன்னனே ! - உயிர்மொழியன்பின்
தென்னனே ! - கன்னித்
தமிழ்ப் பேருலகென்றும்
அமிழ் தாமெனப்போற்றும் பொன்னனே !

- இராதே
Image may contain: 1 person
You, பக்கிரிசாமி தியாகராஜன், Thirumal Govindaraju and 6 others
2 Comments
Like
Comment
Share

வெள்ளி, 5 அக்டோபர், 2018

தலைமைப்பொறிஞர் சுபாசு சந்திரபோசு



மேனாள் தலைமைப்பொறிஞர் சுபாசு சந்திரபோசு

                               (காவடிச்சிந்து)


சிந்தைசெ றிவுடை அறிஞர் ! - தலைமைப்                                 
                                 பொறிஞர் ! - அறிவு
                                 வினைஞர் ! - நட்பு
     சிந்துத் தமிழ்பாடும் கவிஞர் ! - பண்புத்
          திறம்பாடிடும் உயர்வானவர்
          அறமேவியே நமையாள்பவர்
     செம்மன நற்புகழ் போசு ! - அவர்
     செயல்களின் வல்லாண்மை பேசு !


சொந்தங்கள் உள்ளத்தைத் தொடுவார் ! - உறவை
                                                           நடுவார் ! - இன்பம்
                                                          இடுவார் ! - அன்பு
     சுடராலே தவறுகள் சுடுவார் ! -
புசுபா
          துணையோடிவர் பலஆண்டுகள்
          மனைமேவியே நலமாமுயர்
     துலங்கிடும் பொன்வாழ்வு பெறுவார் ! - மணத்
     துணையோடு யாவர்க்கும் அருள்வார் !

தந்திடும் சீர்குண சீலர் ! - மண
                               வாளர் ! - நேர்மை
                               யாளர் ! - கொடை
     தந்திடும் அரிமாவின் வேலர் ! - தொண்டின்
          தடமாகியே பணிமேவிடும்
          இடமாகியே எளியோரெழ
     தன்னையே ஈந்திடும் மாரி ! - இவர்
     தரணியில் இன்னுமோர் பாரி !

சந்திர போசுஐயா  வெல்க ! - மேன்மை
                                  கொள்க ! - நன்மை
                                       மல்க ! - திறமை
     சந்தித்த வழியாவும் சொல்க ! - திண்மை
          சதிராடிடும் உலகாரொடும்
          மதிமேவிடும் உறவாரொடும்
     சந்தனப் பொன்வாழ்வு காண்க ! - பீடு
     சான்றாண்மை பட்டங்கள் பூண்க !

                                                                - இராதே

வியாழன், 4 அக்டோபர், 2018

நூலகம்



நூலள வாகும்நுண் ணறிவு ! - உயர்
     நூலகம் செல்லுதல் செறிவு ! - மட
          நுணலாகவே அறியாமையின்
          அணைநிற்பவர் இருள்நீக்கிடும்
               விளக்கு ! - மனத்
               துலக்கு !

காலநி கழ்வுகள் சொல்லும் ! - நிகழ்
     காலநி ரல்களும் துள்ளும் ! - செய்திக்
          களமாகிடும் நிலமாகியே
          வளமேவிடும் கருவூலமாய்
               கொள்ளும் ! - உளம்
               விள்ளும் !

சிந்தைவ ளம்பெற நாடு ! - குணந்
     தேறநன் நூலினைத் தேடு ! - மூளை
          தெளிவுற்றிட வடிவுற்றெழ
          ஒளிபெற்றிட அறிவுற்றெழக்
               கூடு ! - படி
               ஏடு !

விந்தையில் நல்லுணர் வேறும் ! - கல்வி
     வீரிய செல்வமாய் மாறும் ! - ஆற்றல்
          மெருகேரிட உருவாகிடும்
          அருமைநலன் மிகவேமதி
               ஊறும் ! - புகழ்க்
               கூறும் !

நுண்ணிய நூல்பல அறியும் ! - கலை
     நூல்களின் நுட்பங்கள் புரியும் ! - நுண்மை
          நுகர்வோரிடை உறவாடிட
          தகவோர்நிலை நிறைவாயுறத்
               தெரியும் ! - தேடல்
               விரியும் !

எண்ணமெ ழில்பெறுங் கிடங்கு ! - தரும்
     ஏடுப யன்பல மடங்கு ! - நாளும்
          இனிதாகவே அறிவேபெற
          நனிநூலகப் படியேறிடத்
               தொடங்கு ! - அகம்
               அடங்கு !

                                                 - இராதே

புதன், 3 அக்டோபர், 2018

கொசு


( காவடிச்சிந்து )

மாலையோடி ரவிலுமே
     மாந்தரின்கு ருதியையே
     மாந்திடப்ப றந்துவரும் துன்பமாம் ! - புவி
     மானிடர்க்கு ருதியதற் கின்பமாம் !

சோலையாம்பூ விதழ்களில்
     தோன்றிடும்பூந் தேனினையே
     சுவைத்துண்டே வாழுதே நுளம்புதாம் ! - நோய்த்
     தொற்றரக்கர் தூதராய் விளம்புதாம் !

ஊசியாம்கு ழல்கள்நீட்டி
     உடலினில்ம யக்கம்பாய்ச்சி
     உறிஞ்சும்கு ருதித்தேடல் வேட்டையாம் ! - தம்
     உறவைப்பெ ருக்குகின்ற சேட்டையாம் !

வீசிடும்இ றக்கைகொண்டு
     விரவும்ம ணங்கள்கொண்டு
     விதைக்குமே நோய்களைப்பெண் கொசுக்கள் ! - அவை
     விதியினை முடிக்கும்காலன் சிசுக்கள் !

பற்றுமாம் மூளைக்காய்ச்சல்
     பரவுமாம் டெங்குக்காய்ச்சல்
     பரிசாகக் கொசுத்தருங் கொடையாம் ! - இவை
     பாமரரை மாய்க்கும் கழி சடையாம் !

முற்றுமா னைக்கால்நோயுமே
     முணறும்ம லேரியாவுமே
     முத்தமிடும் கொசுக்கொடுக்கும் வினையாம் ! - நாம்
     முயன்றால் தடுக்கலாம்இ தனையாம் !

வீட்டினையும் தூய்மைசெய்து
     வீதியையும் தூய்மைசெய்து
     விரட்டியேது ரத்திக்கொசு ஓட்டுவோம் ! - இனம்
     வேரறுக்க பல்வழிகள் தீட்டுவோம் !

தீட்டியநம் சிந்தையாலும்
     தெளிந்தநல் லறிவாலும்
     திட்டமிட்டே கொசுவினை ஒழிப்போம் ! - என்றும்
     திரும்பாவ கைகள்கண்டே அழிப்போம் !

                      - இராதே