தமிழ்மாமணி கல்லாடன் 84 ஆம் அகவைநாளில் வாழ்த்தி மகிழ்ந்தோம்
கல்லாடன் கவியழகு!
கார்மேகம் ஈயுங்கொடை கருணைமழை பொய்த்திடினும்; சீர்மேவும் பூந்தென்றல் தீண்டாமல் நின்றிடினும்; தார்வாழைக் குலைத் தள்ளத் தாமாக மறந்திடினும்; பேர்போற்றும் கல்லாடன் பேசுங்கவி மறையாதே!
கறந்திட்டக் கறவைப்பால் கால்நடைகள் மடிபுகினும்; இறங்கிவீழும் காய்கனிகள் எழுந்துவந்தே கிளைபுகினும்; துறந்திட்டத் துறவியர்கள் துள்ளறத்தில் குடிபுகினும்; கரைந்திடாதே மண்ணுலகில் கல்லாடன் கவியழகே!
ஓயாதக் கடலலைகள் ஒருவேளை ஓய்ந்திடினும்; சாயாத இமயந்தான் சமயத்தில் சாய்ந்திடினும்; ஈயாதக் கருமிகள் ஈரமுடன் ஈந்திடினும்; காயாதே மண்ணுலகைக் கல்லாடன் கவியழகே!
மாறாத மாற்றத்தில் மாறுதலும் ஏற்படினும்; வாராதக் காவிரியும் வந்தே அணைத் தாண்டிடினும்; சோராதத் தேனீக்கள் சோர்வினிலே மண்டிடினும்; தீராதே தீந்தமிழ்த்தேன் கல்லாடன் கவியழகே!
– பொறிஞர் இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக