இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

துளிப்பா -18

                  1.போன்சாய்   மரம்
                     குள்ள   மனம்
                     வளர்கிறது


                  2.மாலை   வருகிறேன்
                     விடைபெறும்   நிலா
                     விடியல்


                  3.நுழைய   அழைக்கிறது   வானம்
                     வண்ண   வானவில்
                     வளைவு


                  4.மழை   வருமா ?
                     பறக்கின்றன
                     தும்பிகள்


                  5.புதிய   கட்டடம்
                     கண்ணடி   படுகிறது
                     பூசணி
                                                                      -இராதே

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தோழர் ஜீவா

                                              



  

இலக்கியம்   பேசும்   இளந்தென்றல் !   இன்பம்
துலக்கும்   தமிழனின்   தூவல் !- புலரும்
சிவப்புப்   பரிதி !   சிறக்கும்   பொதுமைக்
கவர்ந்த   இனிப்புக்   கனி



தொழிலாளர்   வாழ்வின்   துணைவன் ! கலைகள்
அழியாது   காத்த   அறிஞன் ! - மொழியை
விழியெனப்   போற்றிய   வீரராம்   ஜீவா
வழிநின்று   ஞாலத்தில்   வாழ்



கம்பனில்   தோய்ந்த   கனியமுது   பாரதி
தெம்பினில்   ஞானத்   தெளிவுறல் - வம்பெனில்
அம்பாய்ப்   பாய்ந்தே   அழிக்கின்ற   ஆற்றலால்
வம்பரும்   அஞ்சும்   வலி



உழைப்போர்   உயர   உழைக்கும்   உறவு !
அழைத்திடும்   ஏழையர்   அன்பன் - மழையாய்ப்
பொழியும்   தமிழின்   பொழிவு ! பொதுமை
வழிகின்ற   ஜீவா   வரம்



அருமைத்   தோழர் !   அறிவின்   அருவி !
பெருமை   நிறைந்த   பிறப்பு - பெருகும்
கருத்தில்   ஒளிரும்   கதிரவன்   ஜீவா
பொருப்பாய்ச்   செயல்பட்ட   பொன்

                                                                                          -இராதே

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நம்பிக்கை !

வாழ்க்கை  மண்டலத்தின்

மன  சலனத்தில்

இருண்டு  திரண்ட

கருத்துப்  பொழிவுகளின்

தேக்கத்தில்  வழிகிறது

கசந்த  நிகழ்வுகள்

மழை  காலமற்ற

மழையாய்

மீட்கவும்  முடியாமல்

நீக்கவும்  முடியாது

நெடுநேரம்  ஓடும்

கால  வெள்ளத்தில்

மிதந்து  மீள்கிறது

நட்பு

வெள்ளேந்தியாய்

எட்டிப்  பார்க்கும்

நினைவுகள்

சூழ்நிலைக்  கம்பளியில்

சுருண்டு  கனகனப்பில்

புரள்கிறது  இதமாய்

வானம்  வெளுக்காதா ?

போர்வையைத்  தள்ளி

தலை  நீட்டுகிறது

நம்பிக்கை !

                                 -இராதே
                                      

நெஞ்சில் எரியும் நெருப்பு - வெண்பா

வஞ்சி   கருவாய்   வயிற்றில்   வளர்ந்தாலே
பிஞ்சு   நிலையில்   பிளக்கின்றார் - வஞ்சக
நெஞ்சத்தார்   செய்கை   நினைத்தாலே   என்றுமே
நெஞ்சில்   எரியும்   நெருப்பு


அடைமழை   கொட்டும் !   அணைகள்   நிரம்பும் !
கடைமடையில்   கண்ணீர்க்   கவலை - எடைபோடும்
தஞ்சை   உழவர்   தவிக்கும்   நிலையெண்ணின்
நெஞ்சில்   எரியும்   நெருப்பு


வஞ்சியர்   பங்கினை   வாங்கித்   தராமலே
வஞ்சகம்   செய்திடும்   வாதிகளே - பஞ்சணைக்கோ
கொஞ்சிக்   குலாவக்   குமரிதேவை ?   எண்ணுகையில்
நெஞ்சில்   எரியும்   நெருப்பு


அன்னைத்   தமிழை   அழிக்க   நினைத்திடும்
சின்ன   மனத்தோர்   செயல்களோ - கன்னமிடும்
வஞ்சகக்   கள்ளர்களின்   வஞ்சிக்கும்   செய்கையென
நெஞ்சில்   எரியும்   நெருப்பு

                                                                                                               -இராதே

சனி, 17 ஆகஸ்ட், 2013

அச்சாணி

சில மௌனங்கள்
அர்த்தங்களாகின்றன
சில அர்த்தங்கள்
மௌனங்களாகின்றன
மௌனமா ? அர்த்தமா ?
புரிதலுக்குள்
ஒளிந்துகிடக்கின்றன
வாழ்க்கையின்
தேடல்கள் !


சில தொடக்கங்களில்
முடிவுகள் !
சில முடிவுகளில்
தொடக்கங்கள் !
முடிவா ? தொடக்கமா ?
முயல்வதற்குள்
முடிந்துவிடுகிறது
வாழ்க்கை !


சுவைக்கின்றன
நினைவுகள் !
சுமக்கின்றன
இதயங்கள் !
சுவையா ? சுமையா ?
விடை தேடி
மறைகின்றன
நாட்கள் !


தலைமாட்டில் கால்
காலடியில் தலை
தலைகால் புரியாத உலகம்
தடுமாறிடும் மனிதம்
அவசர  யுகத்தின்
அச்சாணி !
                                                         -இராதே

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

குறும்பா - 5

தளராதே    தமிழ்மொழியின்    பேச்சு

தாளமிடும்    சந்தத்தின்    வீச்சு

          நாளைவென்று   கணிணிகண்டு

          ஞாலமுள்ள    நாள்வரையில்

 மாளாது     செந்தமிழின்     மூச்சு



திரைத்துறையில்    ஆபாசச்    செத்தை

திரையிட்டு    நாறவைக்கும்    சொத்தை

          மறைப்பொருளை    வெளிகொணர்ந்து

          மடிநிறையப்    பணஞ்சேர்க்கக்

கறைபடிந்த    கள்ளர்களின்    வித்தை



அரசியலில்    இனியுண்டா     வாய்மை ?

அரங்கேறி    நடிக்கிறதே    பொய்மை

          குரங்குக்கை    மாலைபோல

          குதித்தாடும்    அவலத்தை

விரட்டிவிட்டால்    அடைந்துவிடும்    தூய்மை



ஆறுகளில்    மணலள்ளிக்    கொள்ளை

ஆறுவழி    மாறியதால்    தொல்லை

          ஊறுசெய்யும்    மனிதர்கள்

          ஊருணியை    ஒழிப்பதனால்

சீறுமியற்    கைதாண்டும்    எல்லை
                                                                                    - இராதே

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

தமிழ்வழிக் கல்வி

மூளையின்   அணுக்க   ளெல்லாம்
          முனைப்புடன்   ஓடி   யாடி
காளைபோல்   சீறிப்   பாயும்
          கருத்துகள்   கூர்மை   யேறும் ;
கோளையும்   அளக்கும்   ஆற்றல்
          கொண்டதோர்   சிந்தை   தோன்றும் ;
நாளைய   இலக்கை   வெல்லும்
          நற்றமிழ்   மொழியில்   கற்போம் !


குறிப்புகள்   உணர்த்தி   ஈர்த்துக்
          குவித்திடும்   கல்வி   தன்னைச்
செறிவுடைத்   தமிழில்   கற்றால்
          செயல்களில்   செம்மை   காணும் ;
அறிபவை   எளிமை   யாகும் ;
          ஆழ்மனத்   துள்ளே   எட்டும் ;
அறிவினை   இளமை   யாக்கும்
          அருந்தமிழ்   மொழியில்   கற்போம் !


பலவகை   மொழிகற்   றாலும்
          பைந்தமிழ்   வழியில்   கற்றால்
புலப்படும்   தெளிவு   கிட்டும்
          பொங்கிடும்   சிந்தை   துள்ளும் ;
கலப்படச்   சொற்க   ளின்றிக்
          கருத்துகள்   ஊறும்   தேறும் ;
நலந்தரும்   தமிழில்   ஊன்றி
          நாளுமே   கற்போம்   நாமே !


தாய்மொழிக்   கல்வி   தானே
          தரமிகு   பண்பை   வார்க்கும் ;
தாய்மொழி   ஈனும்   நல்ல
          தகைமைசால்   சமச்சீர்   கல்வி ;
தாய்மொழி   புரிதல்   ஊட்டும் ;
          தரணியில்   வாழ்வை   ஏத்தும் ;
தாய்மொழி   கற்போம்!   கற்போம் !
          தமிழ்மொழி   காப்போம்!   காப்போம் !


தமிழ்மொழி   மறந்து   போனால்
          தனித்துவம்   இழந்து   நிற்போம் ;
தமிழ்வழிக்   கற்றல்   நின்றால்
          தமிழ்க்குடி   அற்றுப்   போகும் ;
தமிழ்மொழி   வெறுக்கும்   போக்கைத்
          தமிழரே   கொள்ள   லாமா?
தமிழரே   தமிழில்   கற்பீர் !
          தமிழ்மொழி   காக்க   வாரீர் !
                                                                         -இராதே