இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 16 ஜனவரி, 2015

அன்பு

                                           
அன்புதான்  இன்ப  ஊற்று ;
      அன்புதான்  மூச்சுக்  காற்று ;
அன்புதான்  பண்பின்  நாற்று ;
     அன்புதான்  அறிவின்  கீற்று ;
அன்பினால்  நட்பை  யேற்று ;
     அன்பினதன்  உண்மை  சாற்று ;
அன்பாலே  உலகை  மாற்று ;
     அன்பொன்றே  அருளின்  ஈற்று !

அன்பொன்றும்  இல்லை   யென்பார்
     அளிக்காது  பொருளைச்  சேர்ப்பார் ;
அன்பூறும்  உள்ளம்  கொண்டோர்
     ஆருயிரை  உடலை  ஈவார்;
அன்பதே  இல்லை  யென்றால்
     அழகுத்தோல்  போர்வை  மட்டே;
அன்புடல்  உயிர்க்குக்  கூடு ;
     அன்பிலார்  எலும்புக்  கூடு !

அன்பென்ற  வெள்ளம்  மீறின்
     அடைபடும்  தாழ்பாள்  உண்டோ ?
அன்பெழக்  கசியும்  கண்கள்
     அன்பதன்  ஆழங்  காட்டும் ;
அன்பினால்  பூசல்  ஓயும் ;
     அன்பாலே  துன்பம்  மாயும் ;
அன்புசால்  வாழ்க்கை  வாழ்ந்தால்
     அறம்போற்றும்  மாந்தன் ஆவான் !

வாடிய  பயிரைக்  கண்டே
     வள்ளலார்  வதைந்த  அன்பு ;
சூடிய  மாலை  தந்த
     சுடர்க்கொடி  கோதை  அன்பு ;
பாடியே  தமிழில்  அவ்வை
     பகர்ந்தது  மொழியின்  அன்பு ;
தேடியே  திசைகள்  தோறும்
     தேனூறும்  அன்பின்  மாட்சி !

வான்மழை  முகிலின்  அன்பு ;
     வளர்தென்றல்  காற்றின்  அன்பு ;
வானவில்  நிறங்கள்  ஏழில்
     வழிந்திடும்  ஒளியின்  அன்பு ;
தேன்மலர்  மொய்க்கும்  வண்டு
     தேனினை  வழங்கும்  அன்பு ;
மாண்புடைத்  தமிழர்  பண்பில்
     மண்டிடும்  அன்பு  தானே !
                                                        -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக