இராதே

இராதே
eradevadassou

சனி, 12 டிசம்பர், 2015

பேய்மழை !

                    எடுப்பு

பேய்மழை  பெய்து  பெருவெள்ளம்  பாய்ந்தே
ஊரெல்லாம்  மிதக்கிறதே ! - துயர்
பொங்கிடும்  துன்பம்  மக்களின்  வாழ்க்கையில்
கண்ணீரைச்  சொரிகிறதே ! - அழும்
கண்ணீரைச்  சொரிகிறதே !                                                               (பேய் )                                                                                        
                    முடிப்பு

நின்றாடும்  மேகங்கள்  நிலையான  வானத்தில்
நீருற்றும்  களியாட்டமா ? - புவி
நெடுநாளில்  காணாத  நீங்காத  வரலாற்று
நிலைசொல்லும் சதுராட்டமா ?
வெள்ளம்  போதாது  பாரென்றே  ஊர்சூழ
பள்ளம்  இருக்கின்ற  இடமெல்லாம்  நீர்சூழ                                (பேய் )

புரண்டாடும்  வெள்ளத்தில்  திரண்டாடும்  இல்லங்கள்
மிரண்டாடும்  நிலைசொல்லவா ? - அவை
முரண்பட்ட  கொடியோரின்  முளைவிட்ட  பணத்தாசை
முகிழ்வித்த  கதையல்லவா ?
போதும்  மழையென்றே  ஊர்கூறும்  நிலைகொள்ள
வாழும்  நகரத்தின்  சிக்கல்கள்  தனைசொல்ல                           (பேய் )
                               

மண்ணாசை  பேராசை  மகிழ்கின்ற  திருநாட்டின்
புண்ணான  கதைகாணலாம் ! - இதைச்      
சொன்னாலும்  திருந்தாத  சென்மங்கள்  பலபேரின்
செருக்கான  திமிர்காணலாம் !
வருங்  காலங்கள்  சிறப்புற்றே  ஊர்வாழ
பெரும்  வருத்தங்கள்  மறைகின்ற  நாள்காண                            (பேய் )

                                                                                                                          -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக