இராதே

இராதே
eradevadassou

திங்கள், 17 செப்டம்பர், 2018

ஊருக்கு நல்லது சொல்வோம் !

ஊருக்கு நல்லது சொல்வோம் !

என்னசொல்வ தென்னவென்றே
என்மனத்தை நாடினேன் ;
சொன்னசொற்கள் சோரமாக
சொல்லவார்த்தை தேடினேன் ;
கண்ணவிந்து போனபின்பு
காணஒவி யங்களோ ?
பின்னரென்ன பேசிப்பேசிப்
பிழைக்கவா புவியிலே ?

உண்ணுகின்ற வாய்த்திறந்தே
உண்மைகள் பிறக்குமா ?
தின்னுமிந்த வாய்விடுக்கும்
திணித்தெழுந்த பொய்யுரை ;
கன்னமிட்டுக் கருவறுக்கும்
கயவரெண்ணம் மேலெழும்
சொன்னசொல்லும் ஏற்குமா ?
சுமைசுமந்து நிற்குமா ?

தன்னலந்த ழைத்தெழுந்தே
தற்பெருமை மேவியே
தன்னைமுன் னிலைப்படுத்தித்
தமிழழித் தொழிக்கிறார் !
என்னவென்றே சொல்லுவேன்
எரியுமாண வத்தினை !
பின்னரென்ன சொல்லிச்சொல்லிப்
பிழைக்கவா புவியிலே ?

பொன்னுமணியும் பொருளும்புகழும்
பொற்பதக்க விருதுமே
எண்ணியெண்ணித் தமிழைவிற்றே
எடைக்கெடை ஈடேற்றுறார் !
இன்னல்செயும் இவரையெண்ணி
இன்னுமிங்குச் சிந்தனை
பின்னரென்ன கூறிக்கூறிப்
பிழைக்கவா புவியிலே ?

பெண்மைமேன்மை பேசிப்பேசிப்
பெருந்தகைபோல் நடிக்கிறார் ;
பெண்விளம்ப ரப்படுத்திப்
பெரியகாசும் பார்க்கிறார் ;
இன்பபோகப் பொருளுமாக்கி
இனியபோதை கொள்கிறார் ;
பின்னரென்ன பேசிப்பேசிப்
பிழைக்கவா புவியிலே ?

நண்பரென்றே புன்னகைத்தே
நாடகங்க ளாடுறார் ;
நண்பர்வீழ நஞ்சையூட்டி
நரித்தனத்தை வெல்கிறார் ;
பண்பிலார் பழக்கமெண்ணிப்
பாடியாடி என்பயன் ?
பின்னரென்ன பேசிப்பேசிப்
பிழைக்கவா புவியிலே ?

உண்மையான நன்மைதன்னை
ஊருக்கே உரைக்கனும் ;
உண்மைகண்டு வாயைமூடி
ஊமைபோல் விழிப்பதேன் ?
உண்மைசொல்லி உண்மைசொல்லி
ஊரின்நன்மை கொள்ளுங்கள் !
நன்மைநன்மை நன்மைநல்கி
நன்குவாழ்ந்து வெல்லுங்கள் !

                      -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக