இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

பார் ! பார் ! நல்லா பார் !




கூடு கட்டும் குருவி பார் !
     கூடி வாழும் காகம் பார் !
ஆடு கின்ற மயிலைப் பார் !
     அழகாம் அணிலின் ஓட்டம் பார் !
பேடு கொஞ்சும் குயில்கள் பார் !
     பேசு கின்ற கிளிகள் பார் !
தேடு கின்ற கண்கள் பார் !
     தெரியும் இயற்கைக் காட்சி பார் !

வலையைப் பின்னும் சிலந்தி பார் !
     வாலைக் குழைக்கும் நாயைப் பார் !
தலையை ஆட்டும் ஓணான் பார் !
     தாவி ஆடும் குரங்கைப் பார் !
அலையுங் கொடியில் அரணை பார் !
     அமைதி காக்கும் கொக்கு பார் !
நிலையி லாத உலகைப் பார் !
     நீளும் இயற்கைக் காட்சி பார் !

ஆட்டம் போடும் அருவி பார் !
     அலைந்து திரியும் ஆற்றைப் பார் !
கூட்டம் கூடும் மீன்கள் பார் !
     கொத்திக் கவ்வும் கழுகு பார் !
நோட்டம் பார்க்கும் கருடன் பார் !
     நுங்கு தொங்கும் பனையைப் பார் !
காட்டும் புவியின் எழிலைப் பார் !
     களித்துச் சுவைத்து நல்லா பார் !

                                                                -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக