ஆனந்த களிப்பு
தின்னுற சோறு
தின்னுற தின்னுற சோறு - துருத்தித்
தின்னுற தின்னுற தின்னுற சோறு
என்னென்ன ஏதென்ன செய்தாய்? - ஒன்றும்
இல்லாமல் உண்டுண்டு தொப்பை வளர்த்தாய் ;
நன்னெறி யேதும் இல்லாதே - நனி
நயமின்றி வாழ்வினை உறங்கிக் கெடுத்தாய் ! ( தின்னு )
கெடுமன ஆசைகள் கொண்டே - சுற்றிக்
கேடுறுஞ் செயல்களைச் செய்தே கெடுத்தாய் ;
விடுவிடு தீமைகள் என்றால் - விடா
வீண்வினைப் பழிகளில் சிக்கி உழன்றாய் ! ( தின்னு )
உழைப்பை மறந்தே திரிந்து - வெளி
ஊர்சுற்றி ஊர்சுற்றிக் காலங் கழித்தாய் ;
பிழைப்பென ஏதொன்று மின்றி - பிறர்
பிழைப்பினை வஞ்சித்தே நெஞ்சம் மகிழ்ந்தாய் ! ( தின்னு )
மகிழ்வென பணத்தினைப் பெருக்க - வழி
மாறியே கள்ளத்தை மனத்திலே வைத்தாய் !
பகிர்ந்துண்டுப் பகுத்துண்ணும் வாழ்வை - விட்டுப்
பதுக்கியே பொதுநலப் பாங்கை ஒழித்தாய் ! ( தின்னு )
ஒட்டஒழுக மறுத்தே உலகில் - மெல்ல
ஊடேறும் போதையாம் மதத்தை விதைத்தாய் ;
வெட்டவெட்ட வளர்சாதி நஞ்சு - செடி
வேறூன்ற நாளுமேநீ ரூற்றி வளர்த்தாய் ! ( தின்னு )
தின்னுற தின்னுற சோறு - நீ
திருந்தாமல் தின்னாலே தின்பதே வேறு !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக