இராதே

இராதே
eradevadassou

திங்கள், 14 செப்டம்பர், 2020


                              குருதி

                    ( காவடிச்சிந்து )

செந்தே  னிறமுடைய  நீராம் ! -  உட லோடிடும்

     செந்நீ  ரெனஅணையும்  பேராம் ! -அது

               சிந்திடவீ  ழாமலுடல்

               தன்னுடன்அன்  றாடவலம்

     சென்றிடும்  மாண்பமையும்  சாறாம் ! - தொடர் சுற்றிடும்

     செய்கையின்  னுயிர்வளர்  சீராம் !



சந்தடி  யில்லாமலுடல்  ஊறும் ! -  ஊட்டச் சத்தோடு

     சகலமி  டமும்நிதம்  சேரும் ! - நின்று

               சக்கையுறும்  சேர்கழிவை

               மிக்க அழ  காய்விளையும்

     தக்கவினை  யினால்வெளி  யேறும் ! -  செஞ்சீர் அணுவின்

     சாதனைஇ  தையெடுத்துங்  கூறும் !



நுண்ணிய  அணுவுங்காக்கும்  எல்லை ! -  வரும் நோய்த்தொற்று

     நுண்ணுயி  ரழிக்கும்அணு  வெள்ளை ! - உயர்

               நுட்பமுடன்  தட்டையணு

               வெட்டுடலின்  செங்குருதி

     நொந்தெழச்  செய்வதுவே  இல்லை ! - அணு மூன்றினில்

     நுண்செய  லீர்க்கும்உள்ளங்  கொள்ளை !



உந்துமே  இதயநொடி  தோறும் ! - உயிர்க் காற்றினை

     யுறிஞ்சும்  செங்குருதியும்  சீறும் ! - எலும்

               புள்வளரும்  மஜ்ஜையினி

               லுள்மலரும்  நல்லணுவும்

     உற்றபடி  சுரந்துடம்  பூறும் ! - சுழன் றோடிடும்

     உதிரத்  தில்உரமு  மேறும் !



செய்திடுவோம்  செங்குருதி  ஈகை ! - உயிர் மீட்டிடும்

     செயலிலுங்  கிட்டும்புகழ்  வாகை ! - ஆறு

               திங்களென  ஓர்முறையும்

               தங்கமன  எண்ணமுடன்

     செய்யுங்கொடை  மகிழ்ந்தாடும்  தோகை ! - உயர்ந் தோரிடும்

     செய்கையினால்  மனம்பெறும்  ஓகை !



மெய்யுணர்வை  மீட்டிவிடும்  சுருதி ! - இழப்போ மெனில்

     மேவுமு  யிர் அடைந்திடும்  இறுதி ! - திகழ்

               மெல்லுடலை  நல்லபடி

               செல்லுபடி  யாகும்படி

     மேனிநலங்  காப்பதுதான்  குருதி ! - உயி ராண்டிடும்

     மென்குருதி  காக்கயேற்போம்  உறுதி !


                                                                                                                     - இராதே

ஓகை; உவகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக