புன்மை உலகைப் புதைப்பாய் !
கொலைகளவு மதுமங்கை கொடுந்தொழிலில் உழல்கின்ற
நிலைகண்ட சிறுமதியர் நிறங்கண்டு நிலையான
சிலைபோல இருக்காமல் சிறுத்தையெனச் சினம்பொங்கித்
தலைகொய்யத் திறங்கொண்டு கொலைவாளை எடுத்தெழுவாய் !
முனிவர்போல் நடிக்கின்ற முறையற்ற அடியார்கள்
வனிதையரின் உயர்கற்பை வதைக்கின்ற வருத்தங்கள்
இனிநாட்டில் நடவாமல் இருக்கின்ற வகைசெய்ய
தனிமனித ஒழுக்கங்கள் தழைக்கின்ற நிலையெடுப்பாய் !
கலப்படங்கள் செயுங்கொடியோர் கடத்தல்கள் புரிகின்றோர்
நிலங்களெலாம் மனையாக்கி நிலவணிகம் நடத்துபவர்
கலங்கடிக்கும் தடிகுண்டர் களங்கண்டே உளமகிழ்வோர்
நலங்கெடுக்க உதைகொடுத்து நரம்பறுத்துக் குரல்நெறிப்பாய் !
பழச்சுவையாம் வளர்கல்வி பணங்காய்க்கும் மரமாகக்
குழந்தையர்கள் நுனிநாக்கில் குலாவுகிற மொழியூட்டி
வழங்கிவரும் வெறிச்செயலில் வளர்கின்ற தலைமுறைகள்
இழக்கின்ற இடர்தவிர்க்க இனங்கொண்டு பகைமுடிப்பாய் !
இலங்கையிலே தமிழர்கள் இனமழிய உயிரழித்த
விலங்கனைய கயவர்கள் வினையறுக்கச் சிலிர்த்தெழுவாய்
புலமைமிகு தமிழ்மொழியைப் புறக்கணிக்கும் இழிமதியர்
குலங்கெடுத்துக் குவலயத்தில் குழிதோண்டிப் புதைத்திடுவாய் !
நனிதமிழர் பழகுவழி நயமுடனே சிறந்தெழவே
கனிந்தபழம் குறளோனின் கருத்துவிதை முளைத்தெழவே
அணிவகுத்துத் திரண்டெழுந்தே அறங்காக்கப் புறப்பட்டே
இனிமையுறு பொதுமைநலன் இயல்பமையப் படைத்திடுவாய் !
- இராதே
நவம்பர் 2008
( கலிவிருத்தம்
அளவடி
அடிக்கு 4 சீர் காய்ச்சீர்
முன்றாஞ்சீர் மோனை
காய்முன் நிரை - கலித்தளை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக