இராதே

இராதே
eradevadassou

சனி, 4 ஜனவரி, 2025

குளம்

 குளம்


       ( மா- மா - காய் )


பச்சைப் பட்டை நெய்ததுபோல்

   பாசி படர்ந்த மேல்விரிப்பு ;

நச்சே இல்லா நீர்ப்பாம்பு

   நகலாய்த் தோன்றும் பூமொட்டாய் ;

இச்சை கொண்ட தவளைகளோ

   இயல்பாய்த் தாவி நீர்க்கலக்கும் ;

'அச்சோ' அவற்றை நீரரவம்

   அழகாய் கவ்வி விழுங்கிவிடும் !


'பாசை' அகற்றிப் பார்த்தாலோ

    பளிங்கு போல நீர்தெரியும் ;

ஓசை யெழுப்பும் அதனலைகள்

   ஒதுக்கும் செத்தை குப்பைகளை ;

மீசை இறால்அ, மீன்கூட்டம்

   மேலே துள்ளி விளையாடும் ;

ஆசை யோடு பொரிதூவி 

   அழகின் அழகைச் சுவைத்திடுவோம் !

  

கெண்டை கெளுத்தி பெருங்குரவை

   கேட்பா ரற்று மிகுந்திருக்கும் ;

நண்டின் நடனம் கரையோரம் 

   நாளுங் களிக்க நடந்தேறும் ;

தண்டின் மேலே தாமரைப்பூ

   தண்ணீர் தவழும் அதனிலைகள்

வண்டுகள் சுற்றித் தேன்குடிக்கும்

    வற்றா தூறும் எம்குளமே !


மொத்தம் மூன்று படித்துறைகள்

   மூழ்கித் ததும்பும் நீர்மட்டம் ;

நித்தம் நிற்கும் வெண்கொக்கு

   நீண்ட நேரந் தவமிருக்கும் ;

சத்தம் இன்றி மீன்கொத்த

   சலிப்பே இன்றிக் காத்திருக்கும் ;

புத்தம் புதிய கரைப்பூக்கள்

    புன்ன கையோடே அதைநோக்கும் !


மேட்டில் பசுக்கள் நின்றபடி

   மெல்ல குனிந்து நீரருந்தும் ;

ஓட்டின் சில்லை யெறிந்துவிட 

   ஓடும் நெளிந்து நீர்வளையம் ;

நீட்ட மான தூண்டிலிலே

   நெளியும் புழுவை மாட்டிவிட்டு

வாட்டமான இடம் பார்த்து

   வாகாய் அமர்ந்தே மீன்பிடிப்போம் !


தக்கை யடித்த மறுநொடியில்

   தத்த ளிக்கும் மீன்தெரியும் !

பக்க வாட்டில் 'பறி'தனிலே

   பறித்தே அதனைப் போட்டுவைப்போம் ;

தக்கை மரத்தில் சிறுபடகைத்

   தவழ விட்டே அகமகிழ்வோம் ;

சிக்கிக் கொண்டால்  சிரித்தபடி

   சிக்கல் நீக்கிச் சிறகடிப்போம் !


ஊற்று தானாய்ப் பொங்கியெழும்

   ஒவ்வொரு மூலையில் கிணறிருக்கும் ;

கீற்றைப் பின்ன மட்டைகளும்

   கிடக்கும் ஊறிக் குளத்தினிலே ;

ஏற்றம் போட்டு நீரிறைப்பார்

   எங்கும் பாயும் வாயல்வெளியில்

நாற்று நட்டு நெல்விளைய

   நன்றே பாய்ச்சல் தருங்குளமாம் !


படிகள் ஒட்டி நீர்ப்பரப்பில்

   பறக்கும் சிறிய பூச்சிகளைப்

பிடித்தே தின்ன நாநீட்டிப்

   புலன்கள் தீட்டிப் பார்த்தபடி

கொடிகள் இலைகள் நடுவினிலே

கொம்பேறி மூக்கன் கொலுவிருக்கும் ;

அடிகள் மெதுவாய் எடுத்துவைத்தே

   அசைந்தே ஆடி வரும்ஓணான் !


படியில் லாத கரையோரம்

   பழத்தைக் கொடுக்கும் மரமிருக்கும் ;

கடித்தே அணில்கள் துப்புவதைக்

   கவ்விப் பிடிக்க மீன்களெழும் ;

வடிவில் சிறிய 'நக்குவாரி'

   வழங்கும் குலைகள் தண்ணீரில்

படிந்துத் தேய்ந்தே உருண்டாடும்

   பார்க்க பார்க்க இனிமைதரும் !


நயமாய் நின்ற நினைவுகளை

   நானும் நினைத்தே அசைபோட்டேன் ;

செயலில் மிகுந்த தன்னலத்தால்

   செத்துப் போச்சே குளங்கூட ;

செயற்கை நிறைந்த உலகத்தில்

   செழிக்கும் வளத்தை அழித்திட்டோம் ;

இயற்கை தந்த இனியவரம்

  இன்று காணாப் பெருந்துயரம் !


                           -  இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக