இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

பொங்கல் !


பொங்கல் !


காவடிச்சிந்து


(பொன்னுலவு சென்னிகுள - மெட்டு)


அஞ்சேலென ஏர்பிடித்தே

கொஞ்சும் வளை கைப்பிடித்தே

   அள்ளஅள்ள விதைநெல்லுந் தந்துமே - களை

அகற்றிடக் கைகளெல்லாம் முந்துமே - நிலம்

      ஆழஉழுதிட சேரநீர்விட

      தாழஎருவிட ஆர்ந்தசெம்பயிர்

   அள்ளிக்கட்ட நெற்கதிர்கள் உந்துமே - உழவர்

   துள்ளியெழப் புன்னகையுஞ் சிந்துமே !


இஞ்சிமஞ்சள் செங்கரும்பு

நஞ்சையில் முளைத்தநெல்லு

   எங்குமே விளைச்சலாகி அண்டுமே - தைத்

   திங்களிலே உன்கவலைச் சுண்டுமே - கடல்

      ஈனும்மஞ்சுவின் வானுலாவிலே

      காணும்மாமழை மீறிப்பெய்திட

   ஏகபோக நல்மகசூல் கண்டுமே - இயற்கை

   ஈகையாலே செல்வவளம் மண்டுமே !


அச்சுவெல்லம் பச்சரிசி

மெச்சுகிற புதுப்பானை

   அச்சிறிய அடுப்பினி லேற்றியே - பாலை

   'உச்சு'கொட்டிப் பானையிலே ஊற்றியே - பெரும்

      ஆரவாரமாய்ப் பானைமீதெழும்

      தீரமாநுரை சேர்ந்துபொங்கிட

   அன்புநிறை பொங்கலொலி முற்றியே - பேணும்

   இன்பநிலை பரவிடுஞ் சுற்றியே !


உச்சகட்டப் பண்பினோடே

இச்சையோடே செந்தமிழர்

   ஒத்தநல்ல செயல்களைக் கூட்டியே - இன

   ஒத்துழைப்பை நெஞ்சினிலே நாட்டியே - வானில்

      ஓடுஞாயிறும் ஊறுமாமுகில்

      பீடுவான்மழை யாவுமேபெற

   உண்மையோடே நன்றிகளைச் சூட்டியே - மகிழ்வு

   எண்ணங்களை உலகிற்குக் காட்டியே !


மேயுங்காளை சீறுங்காளை

பாயுங்காளை தாவுங்காளை

   மீறியே வாடிவாசல்கண் ஓடுமே - திடல்

   ஏறியே வளைந்துவளைந்  தாடுமே - வீரம்

      மேவிபீறிட வீரர்யாவரும்

      தாவித்தாவியே காளைமாட்டினை

   வெல்லுங்காட்சி வீரவாகை சூடுமே - அதை

   சொல்லிசொல்லி தமிழினம் பாடுமே !


சாயும்மாலை வண்டிக்கட்டி

வேயுங்குருத் தோலைக்கட்டி

   சல்லிக்கட்டு மாடுகளைப் பூட்டியே - அட

   மல்லுக்கட்டி வீதிகளில் ஓட்டியே - கையில்

      சாட்டைநீண்டிட சந்துபொந்தெலாம்       

     பாட்டைபோட்டுடன் சேட்டைமேலிட

   தள்ளுமுள்ளு ஆட்டங்களுந் தீட்டியே - உள்ளந்

   துள்ளித்துள்ளு மேநெகிழ்வை மீட்டியே !


ஓடியாடிப் பாத்திக்கட்டி

பாடிபாடி நீரிறைத்தே

   உண்ணுஞ்சோறு விளைநல்நி லங்களே - தமிழ்

   வண்ணம்பாடி மகிழுந்தைத் திங்களே - மக்கள்

      ஒன்றுசேர்ந்துமே காணும்பொங்கலில்

      அன்பைவேண்டியே சேருஞ்சொந்தங்கள்

   உள்ளமெலாம் களிப்போமே நாங்களே - நன்றி

   சொல்லுகிற நாள்தான்தைப் பொங்கலே !


நாடிநாடி நெல்லறுத்தே

தேடிதேடி தானுழவர்

   நல்லுழைப்பில் அறுவடை நெல்விழா - இன்பம்

   எல்லோருமே சிரித்திடும் பல்விழா - துன்பம்

      நைந்துமாய்ந்திட திண்மைபெருகிட

மெய்மைஓங்கிட பொய்மைவீழ்ந்திட

   நம்தமிழர் போற்றுகிற தொல்விழா - என்றும்

   நம்மரபை நிறுவிடும் நல்விழா !


                         - இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக