இராதே

இராதே
eradevadassou

வியாழன், 2 ஜனவரி, 2025

காலை

 காலை


(விளம் - மா - மா)


செங்கதிர் விரியும் வானில்

   சிவப்பினை மெழுகும் மெல்ல

பொங்கிடும் நுரையோ பூத்துப்

   பொத்தென அலைகள் சாயும்;

தங்கிடும் சோழி சிப்பி

   சங்குகள் ஒதுங்கிச் சேரும்;

'அங்கியாம்' கருக்கல் பைய

   அவிழ்ந்திடக் காலை தோன்றும் !


திங்களோ பணிகள் ஓய்ந்துத்

   திரும்பிட எத்த னிக்கும் ;

தெங்கிலே தொங்கும் பாளை

   தெளிவுடன் சிரிப்பைக் காட்டும் ;

பங்கிடும் இரையைக் குஞ்சு 

   பறவைகள் முந்தித் தின்னும் ;

கங்குலின் கருமை தேய்ந்து

   காலையே வெளுப்பாய்த் தோன்றும் !


பூந்தளிர் சிந்தும் தேனோ

   பூவிதழ் வழியே சொட்டும் ;

மாந்திட வண்டின் கூட்டம்

   வரிசையின் அளவை நீட்டும் ;

நீந்திடும் திருக்கை வாளை

   நீள்கடல் மேலே துள்ளும் ;

ஏந்திடும் முகில்தன் கையில்

   எழுந்திடும் பரிதி காலை !


வெண்பனி நனைக்கும் புல்லை

   வெடுக்கென பூக்கும் முல்லை

கண்மணி கருவைக் காக்கும்

   கடமைசெய் இமையைப் போலேத்

தன்பணி இயற்கை சுற்றம்

   தழுவியே காலை தோன்றும்

நின்பணி கடமை யாற்றி

    நிறைவினைக் கொள்ளல் வேண்டும் !

                        - இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக