இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 5 நவம்பர், 2013

ஆனை

ஆடி  அசைந்தே  ஆடியே
          ஆனை  ஒன்று  வந்ததே ;
ஆடும்  மணியின்  ஓசையும்
          ஆனை  வரவைக்  கூறுதே ;
கூடி யாடும்  குழந்தையர்
          கூட்டம்  பின்னே  சென்றதே ;
பாடி யாடித்  துள்ளியே
          பார்த்துச்  சிரித்து  மகிழ்ந்ததே !


ஆசி  வழங்க  தும்பிக்கை
          ஆனை  தூக்கி  நின்றதே ;
ஊசி  ஒன்றை  பழத்துடன்
          உட்செ  லுத்தி  ஆனைக்கு
யோசி  யாமல்  சிறுவனும்
          உணவாம்  என்றே  வழங்கினான் ;
ஊசி  நெஞ்சில்  குத்தவே
          ஓடி  ஆனை  பிளிறுதே !


கூறு  கெட்ட  மதியுடன்
          குறும்பு  செய்கை  விலங்கினை
ஊறு  செய்து  வாட்டுதே ;
          உயிர்கள்  துயரில்  வேகுதே ;
ஊறும்  அன்பை  உயிரினம்
          உய்யும்  வகையில்  காட்டுங்கள் ;
பேறு  பெருமை  புகழெலாம்
          பெருகி  வந்து  சேருமே !
                                                                 - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக