இராதே

இராதே
eradevadassou

வியாழன், 23 ஜனவரி, 2025

கொடுமை முளைவிடு நெஞ்சர் !

 கொடுமை முளைவிடு நெஞ்சர் !


இந்தியப் பொன்னெழில் நன்னாடே ! - உம்மை

   ஏய்த்துப்பி ழைப்பவ ராரே டி ?

முந்திப் பெருபண மூட்டை கட்டு கின்ற

   முதலாளி வர்க்கத்தின்  எத்த ரடி !

ஒற்றுமை பேணிடும் பொன்னாடே ! - உம்மை

   ஓடேந்த வைப்பவ ராரே டி ?

கற்றுத்தெ ளிந்த கல்மன வஞ்சக

   கறுப்புப் பணப்பேய்ப் பித்த ரடி !

வற்றாதி ருக்கின்ற திண்ணாடே ! - உம்மை

   வறுமையில் தள்ளுவோ ராரே டி ?

பற்றியு றிஞ்சிடும் பன்னாட்டு வணிகத்தைப்

   பல்லாக்கில் தூக்கிடும் மனத்த ரடி !

வீரம்வி ளைகிற தொல்நாடே ! - உம்மை

   வீழ்த்த நினைப்பவ ராரே டி ?

கோரம தவாத கொட்ட மடிகின்ற

   கொடுமை முளைவிடு நெஞ்ச ரடி !

                                   -  இராதே

                                     10.02.2016


( தோழியர் உரையாடல் , தாழிசை )


புதன், 22 ஜனவரி, 2025

புன்மை உலகைப் புதைப்பாய் !

 புன்மை உலகைப் புதைப்பாய் !


கொலைகளவு மதுமங்கை கொடுந்தொழிலில் உழல்கின்ற

நிலைகண்ட சிறுமதியர் நிறங்கண்டு நிலையான

சிலைபோல இருக்காமல் சிறுத்தையெனச் சினம்பொங்கித்

தலைகொய்யத் திறங்கொண்டு கொலைவாளை எடுத்தெழுவாய் !


முனிவர்போல் நடிக்கின்ற முறையற்ற அடியார்கள் 

வனிதையரின் உயர்கற்பை வதைக்கின்ற வருத்தங்கள்

இனிநாட்டில் நடவாமல் இருக்கின்ற வகைசெய்ய

தனிமனித ஒழுக்கங்கள் தழைக்கின்ற நிலையெடுப்பாய் !


கலப்படங்கள் செயுங்கொடியோர் கடத்தல்கள் புரிகின்றோர்

நிலங்களெலாம் மனையாக்கி நிலவணிகம் நடத்துபவர்

கலங்கடிக்கும் தடிகுண்டர் களங்கண்டே உளமகிழ்வோர்

நலங்கெடுக்க உதைகொடுத்து நரம்பறுத்துக் குரல்நெறிப்பாய் !


பழச்சுவையாம் வளர்கல்வி பணங்காய்க்கும் மரமாகக்

குழந்தையர்கள் நுனிநாக்கில் குலாவுகிற மொழியூட்டி

வழங்கிவரும் வெறிச்செயலில் வளர்கின்ற தலைமுறைகள்

இழக்கின்ற இடர்தவிர்க்க இனங்கொண்டு பகைமுடிப்பாய் !


இலங்கையிலே தமிழர்கள் இனமழிய  உயிரழித்த

விலங்கனைய கயவர்கள் வினையறுக்கச் சிலிர்த்தெழுவாய்

புலமைமிகு தமிழ்மொழியைப் புறக்கணிக்கும் இழிமதியர்

குலங்கெடுத்துக் குவலயத்தில் குழிதோண்டிப் புதைத்திடுவாய் !


நனிதமிழர் பழகுவழி நயமுடனே சிறந்தெழவே

கனிந்தபழம் குறளோனின் கருத்துவிதை முளைத்தெழவே

அணிவகுத்துத் திரண்டெழுந்தே அறங்காக்கப் புறப்பட்டே

இனிமையுறு பொதுமைநலன் இயல்பமையப் படைத்திடுவாய் !


                                    - இராதே

                                  நவம்பர் 2008


(  கலிவிருத்தம்

   அளவடி

   அடிக்கு 4 சீர் காய்ச்சீர்

    முன்றாஞ்சீர் மோனை

    காய்முன் நிரை - கலித்தளை )


சனி, 18 ஜனவரி, 2025

கொழுப்பு



தயிரைத் தேக்கி உரியில் தொங்கும்

   தாழி போல தோன்றுந் தொப்பை ;

வயிற்றின் அடியில் மெல்ல படியும்

   வளமை மிகுந்த செழுமை  குப்பை ;

பயிற்சி முயற்சி சிறிதும் இன்றி

   பதமாய்ச் சோம்பல் வளர்க்கும் தொம்பை ;

பயின்று முனைந்தால் மறையும் என்று 

   பார்த்துப் பார்த்தே  இழப்போம் தெம்பை !


இடையில் கூடும் ; இடுப்பின் மடிப்பாய்

   இயல்பின் அழகைக் கெடுக்கச் சேரும் ;

தொடையில் குவிந்தே நடக்க முடியாத்

   தொல்லைப் பெருக்குந் துயரம் நேரும் ;

தடையாய் மாறி கரையா திருந்தே

   தவிக்கும் வாழ்வே நாளும் ஊறும் ;

அடைந்துத் தூர்ந்தே குருதி ஓடும்

   அகலங் குறைந்து குழலுஞ் சோரும் !


மூச்சும் இறைக்கும் உடலில் வியர்வை

   முழுதும் பொங்கி ஊற்றாய் முந்தும் ;

கூச்சம் மண்டி ; வெளியில் போக

   குரங்கு மனமும் கண்ணீர் சிந்தும் ;

பேச்சுங் குறையும் ; கவலை பெருகிப்

   பிறழும் மதியும் அடங்கிக் குந்தும் ;

வீச்சே இல்லா மாந்த ராகி

   வெறுப்பே நெஞ்சில் குதித்து நீந்தும் !


            - இராதே

புதன், 8 ஜனவரி, 2025

காலங்கண்ட பொருள்கள்

 காலங் கண்ட பொருள்கள் !


ஆட்டுக் கல்லு ஆடல;

   அம்மி  கல்லு அறைக்கல ;

போட்டுக் குத்தும் உலக்கையும்

   பொடித்துக் கொடுக்கும் உரலையும்

மீட்டெ டுக்க ஆளில்ல

   மீண்டும் கொணர வழியில ;

சட்டிப் பானை மண்குடம்

   சட்ட செய்ய யாருண்டு ?


கட்டுப் பட்டே உழைத்திட

   கடுகு மனமும் விரும்பல ;

முட்டு போடும் சோம்பலில்

   முணுகி உலகம் சுருங்குது ;

கெட்டு போகும் பாரிலே

    கேடு கெட்ட தன்னலம் ;

குட்டிக் கரணம் போடுது

   கொட்ட மடித்தே ஆடுது!


வியந்துப் போற்றும் உழைப்புமே

   விழலுக் கிரைத்த நீரதாய்ப்

பயன்க ளற்றுப் போனது ;

   பாழும் நோயும் சூழுது ;

கயமை பூண்ட உளத்தினால்

   காலங் கண்ட பொருள்களும்

 பயனி லாது மறையுது

   பண்பும் மரபும் மாளுது !


                    - இராதே

                     14.09.2013


அந்தாதி முரசு

 காவடிச் சிந்து


அந்தாதி முரசு


தீந்தமிழ் அந்தாதி முரசு - அறிவில்

அரசு - அன்பின்

சிரசு - உயர்

தேன்தமிழ்க் காத்திடும் பரசு - தவத்

   திருமாலுறை அரங்கன்மகன்

   அருமாதமிழ் கலைமாமணி

செம்மைசீர்க் காலையூர் நாடன் - இவர்

நம்தமிழ் பேணிடும் வேடன் !


சிந்தை மொழியூறும் ஊற்று - கொள்கை

நாற்று - கலைக்

காற்று - மரபு

சிந்தும்பா இசைத்திடும் கீற்று - வேச

   திருமாவளன் உளமேவிய

   அரும்பாவலன் வளமார்கவி

செப்பிடும் வெண்பாவில் பெண்பா ! - புகழ்

அப்பிடும் அந்தாதி வெண்பா !


வெந்தணல் இனமானம் பேசும் - கனல்

கூசும் - படி

ஏசும் - நெய்தல்

வெண்டமிழ்ச் சாமரம் வீசும் - நனி

வியன்மாத்தமிழ் உரமேயென

பயனோடதை நலமேவிட

வெற்றிநெய்யும் நாடன் பாட்டு - அதை

பற்றிடுமே வையங் கேட்டு !


பைந்தமிழ் இவர்பாவில் துள்ளும் - புலமை

அள்ளும் - மேன்மை

உள்ளும் - நாடன்

பாப்புகழ் என்றென்றும் வெல்லும் - நாட்டுப்

   பணிச்சேவையில் நலமோங்கிட

   அணியேசெயும் தனிநாயகன்

பண்புள்ளம் பார்போற்ற வாழ்க ! - வாழ்வில்

ஒண்டமிழ் வாழ்த்துமே சூழ்க !


                             - இராதே

செவ்வாய், 7 ஜனவரி, 2025

பட்டிமன்ற வேழம்

 காவடிச் சிந்து


பட்டிமன்ற வேழம் !


முத்தமிழ் கோவிந்த ராசர் - அன்பில்

ஈசர் - பண்பின்

வாசர் - வைர

முத்து கவிஞரின் நேசர் - உறவின்

முதலாகிய திருமால்மகன்

இதமாகியே பழகுங்குணம்

முந்திடும் நட்பிற்கோர் சிகரம் - ராசு

தந்திடும் பாத்துள்ளும் மகரம் !


மெத்த சொற்சிலம்பம் ஆடி - பொய்மை

சாடி - வாகை

சூடி - புகழ்

மேன்மை யுறும்படி கூடி - பல

மிளிர்மேடைகள் ஒலிவாங்கிகள்

ஒலிக்கும்படி அதிரும்வெடி

வெல்லும் பட்டிமன்ற வேழம் - இவர்

சொல்லுங் கருத்துகள் ஆழம் !


புத்தம்புதுப் பாக்கள் படைப்பார் - பழமை

உடைப்பார் - பகையைப்

புடைப்பார் - சிறுமை

பொங்கும் வழிகளை அடைப்பார் - குற்றம்

புரிவோர்தமைத் தவறேயென

அறியும்படி உரைவீச்சுகள்

பொழியும் வழக்குரை அறிஞர் - தமிழ்

வழியும் இலக்கிய நெறிஞர் !


சித்திர சிவகாமி சூடன் - கொள்கை

நாடன் - மொழி

வேடன் - எளிமை

சேர்த்திடும் நல்லோர்க்குச் சீடன் - தி.கோ

திருமேவிட நலமேபெற

அருள்கூடிட வளமேயுறச்

செப்பிடும் இராதேவின் சிந்து - வாழ்த்து

எப்பவும் மேலிடும்உ வந்து !


             - இராதே

திங்கள், 6 ஜனவரி, 2025

ஊடகம்


 காவடிச் சிந்து


செய்தி ஊடகம்


சீர்மிகுஞ்சு டச்செய்தி வருமாம் - கற்போர்

   சிந்தனையைத் தூண்டிவிட புத்தறிவு தருமாம்

ஊர்மிகுங்க ருத்தாடல் பெறுமாம்  - உலக

   உண்மையினை நாடறிய ஆற்றிடுந்தொண் டாமே !


நல்லுணர்வு செய்திவெளி யிட்டே - அரிய

   நல்லறிவை மக்களுக்கே அடையவழி விட்டே

உள்ளுணர்வு பெறும்செய்தித் தொட்டே - வண்ண

   ஊடகம்நி கழ்த்துகிற  உற்றநற்றொண் டாமே !


புத்தொளிர்ப்பொ துவறிவு பூணாம் - மாந்தர்

   புந்தியிலெ ழுஞ்சியுற புகட்டும்பூந் தேனாம் !

மெத்தஉயர் அறங்களின் தூணாம் - எவரும்

   மெய்யறிவு பெற்றுயர சுற்றும்விண்மீ னாமே !


வன்முறையை ஆதரிக்கும் ஏடோ ? - நாட்டில்

   மண்டிவளர் பாலுணர்வுத் தூண்டுமிதழ்க் கேடோ?

வன்மத்தின் சாதிமதக் கூடோ ? - என

   மாறுநிலை ஓடிவிட  ஏடுகள்செய் வோமே !


வீண்புரளிப் பொய்புரட்டைப் போக்கி - விற்க

   மேன்மையுறு நடுநிலைத் தவறும்வழி நோக்கி

மாண்புகள் இலாசிலரைத் தூக்கிச் - செய்யும்

   மாய்மால வித்தைகளைத் தள்ளுதல்நன் றாமே !


          -  இராதே

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

பொங்கல் !


பொங்கல் !


காவடிச்சிந்து


(பொன்னுலவு சென்னிகுள - மெட்டு)


அஞ்சேலென ஏர்பிடித்தே

கொஞ்சும் வளை கைப்பிடித்தே

   அள்ளஅள்ள விதைநெல்லுந் தந்துமே - களை

அகற்றிடக் கைகளெல்லாம் முந்துமே - நிலம்

      ஆழஉழுதிட சேரநீர்விட

      தாழஎருவிட ஆர்ந்தசெம்பயிர்

   அள்ளிக்கட்ட நெற்கதிர்கள் உந்துமே - உழவர்

   துள்ளியெழப் புன்னகையுஞ் சிந்துமே !


இஞ்சிமஞ்சள் செங்கரும்பு

நஞ்சையில் முளைத்தநெல்லு

   எங்குமே விளைச்சலாகி அண்டுமே - தைத்

   திங்களிலே உன்கவலைச் சுண்டுமே - கடல்

      ஈனும்மஞ்சுவின் வானுலாவிலே

      காணும்மாமழை மீறிப்பெய்திட

   ஏகபோக நல்மகசூல் கண்டுமே - இயற்கை

   ஈகையாலே செல்வவளம் மண்டுமே !


அச்சுவெல்லம் பச்சரிசி

மெச்சுகிற புதுப்பானை

   அச்சிறிய அடுப்பினி லேற்றியே - பாலை

   'உச்சு'கொட்டிப் பானையிலே ஊற்றியே - பெரும்

      ஆரவாரமாய்ப் பானைமீதெழும்

      தீரமாநுரை சேர்ந்துபொங்கிட

   அன்புநிறை பொங்கலொலி முற்றியே - பேணும்

   இன்பநிலை பரவிடுஞ் சுற்றியே !


உச்சகட்டப் பண்பினோடே

இச்சையோடே செந்தமிழர்

   ஒத்தநல்ல செயல்களைக் கூட்டியே - இன

   ஒத்துழைப்பை நெஞ்சினிலே நாட்டியே - வானில்

      ஓடுஞாயிறும் ஊறுமாமுகில்

      பீடுவான்மழை யாவுமேபெற

   உண்மையோடே நன்றிகளைச் சூட்டியே - மகிழ்வு

   எண்ணங்களை உலகிற்குக் காட்டியே !


மேயுங்காளை சீறுங்காளை

பாயுங்காளை தாவுங்காளை

   மீறியே வாடிவாசல்கண் ஓடுமே - திடல்

   ஏறியே வளைந்துவளைந்  தாடுமே - வீரம்

      மேவிபீறிட வீரர்யாவரும்

      தாவித்தாவியே காளைமாட்டினை

   வெல்லுங்காட்சி வீரவாகை சூடுமே - அதை

   சொல்லிசொல்லி தமிழினம் பாடுமே !


சாயும்மாலை வண்டிக்கட்டி

வேயுங்குருத் தோலைக்கட்டி

   சல்லிக்கட்டு மாடுகளைப் பூட்டியே - அட

   மல்லுக்கட்டி வீதிகளில் ஓட்டியே - கையில்

      சாட்டைநீண்டிட சந்துபொந்தெலாம்       

     பாட்டைபோட்டுடன் சேட்டைமேலிட

   தள்ளுமுள்ளு ஆட்டங்களுந் தீட்டியே - உள்ளந்

   துள்ளித்துள்ளு மேநெகிழ்வை மீட்டியே !


ஓடியாடிப் பாத்திக்கட்டி

பாடிபாடி நீரிறைத்தே

   உண்ணுஞ்சோறு விளைநல்நி லங்களே - தமிழ்

   வண்ணம்பாடி மகிழுந்தைத் திங்களே - மக்கள்

      ஒன்றுசேர்ந்துமே காணும்பொங்கலில்

      அன்பைவேண்டியே சேருஞ்சொந்தங்கள்

   உள்ளமெலாம் களிப்போமே நாங்களே - நன்றி

   சொல்லுகிற நாள்தான்தைப் பொங்கலே !


நாடிநாடி நெல்லறுத்தே

தேடிதேடி தானுழவர்

   நல்லுழைப்பில் அறுவடை நெல்விழா - இன்பம்

   எல்லோருமே சிரித்திடும் பல்விழா - துன்பம்

      நைந்துமாய்ந்திட திண்மைபெருகிட

மெய்மைஓங்கிட பொய்மைவீழ்ந்திட

   நம்தமிழர் போற்றுகிற தொல்விழா - என்றும்

   நம்மரபை நிறுவிடும் நல்விழா !


                         - இராதே


அரசமரம்

 அரச மரம்

( விளம் - மா- மா )


ஓடிடும் அணில்கள் தொங்கி

   ஊஞ்சலாய் ஆடும் வௌவால் ;

பாடிடும் குயில்கள் வானம்

   பாடியின் இசையுங் கேட்கும் ;

கூடிடுங் காலை மாலை

   குருவிகள் கூட்டம் அங்கே ;

தேடிடும் இரவில் கோட்டான்

   திகிலுற அலறும் ஆந்தை !


கனிகளைக் கொத்தித் தின்னக்

   கருக்களில் கிளிகள் கூடும் ;

பனிமலர் சிந்துந் தேனை

   பருகிட எறும்பும் ஊறும் ;

இனிமைகள் நிறைந்த கூட்டில் 

   இறகினைக் கிளிகள் ஆற்றும் ;

நனிசுவை இரையை ஊட்ட

   நலம்பெற வளருங் குஞ்சே !


கூட்டிடை முட்டை தன்னைக்

   குடித்திடப் பாம்பும் ஏறும் ;

நோட்டமாய்ப் பருந்து நோக்கும்

   நொடியினில் பாம்பைத் தூக்கும் ;

நீட்டமாய்க் கிளைஉச் சத்தில்

   நெருப்பெனக் கொட்டுந் தேனீ

வாட்டமாய்க் கூட்டைக் கட்டி

   வான்சுவைத் தேனைச் சேர்க்கும் !


அந்தியில் மஞ்சள் வெயில்

   அழகினை இலைக்குத் தீட்டும் ;

மந்தியின் ஆட்டம் மிஞ்ச

   மரக்கிளை ஒடியும் வீழும் ;

பொந்திடை உறங்கும் ஆந்தை

   புறப்படும் இரவில் மெல்ல

சந்திடை எலிகள் ஓடச்

   சற்றெனப் பற்றித் தின்னும் !


கொத்திடக் குளத்து மீனைக்

   குத்திகள் காத்து நிற்கும் ;

மத்தள ஓசை தோற்க

   மரங்கொத்திப் பறவை கொத்தும் ;

கத்திய கருடன் கீழே

   காக்கையின் குஞ்சைக் கவ்வும் ;

சத்தமாய்க் கரைந்து காகம்

   தன்னினம் அழைக்கும் ஏங்கும் !


ஆட்டிடுந் தலையை ஓணான்

   அறுந்தவால் அரணை ஓடும் ;

கேட்டிடுங் கௌளி தாளம்

   கிறங்கிடும் இணையுந் தேடும் ;

மாட்டுடை உறுப்பின் எச்சம்

   மரத்தினில் தொங்கும் மக்கள்

வீட்டிலே அடுப்பை மூட்ட

   விழுந்திடுஞ் சுள்ளி தேறும் !


தொங்கிடுங் கிளையைப் பற்றித்

   துள்ளிடுஞ் சிறுவர் கூட்டம் ;

தங்கிய கரிமக் காற்றைத்

   தன்னுளே உறிஞ்சும் உண்ணும் ;

பொங்கிடும் உயிரின் மூச்சைப்

   பொறுப்புடன் உலகிற் கீயும் ;

வங்கிபோல் தொண்டு செய்யும்

   வாழ்விலே நன்மை பேணும் !


அளவிலாக் கிளைகள் கொண்டே

   அடர்த்தியின் திண்மங் காட்டும் ;

உளவினை நிலவு பார்க்க

   ஒளியினை உள்ளே பாய்ச்சும் ;

விளக்கமே இல்லா தாகி

   விருட்டென நிலவு செல்லும் ;

அளவிட முடியா எங்கள் 

   அழகுடை அரசே வாழ்க !


                         - இராதே


சனி, 4 ஜனவரி, 2025

குளம்

 குளம்


       ( மா- மா - காய் )


பச்சைப் பட்டை நெய்ததுபோல்

   பாசி படர்ந்த மேல்விரிப்பு ;

நச்சே இல்லா நீர்ப்பாம்பு

   நகலாய்த் தோன்றும் பூமொட்டாய் ;

இச்சை கொண்ட தவளைகளோ

   இயல்பாய்த் தாவி நீர்க்கலக்கும் ;

'அச்சோ' அவற்றை நீரரவம்

   அழகாய் கவ்வி விழுங்கிவிடும் !


'பாசை' அகற்றிப் பார்த்தாலோ

    பளிங்கு போல நீர்தெரியும் ;

ஓசை யெழுப்பும் அதனலைகள்

   ஒதுக்கும் செத்தை குப்பைகளை ;

மீசை இறால்அ, மீன்கூட்டம்

   மேலே துள்ளி விளையாடும் ;

ஆசை யோடு பொரிதூவி 

   அழகின் அழகைச் சுவைத்திடுவோம் !

  

கெண்டை கெளுத்தி பெருங்குரவை

   கேட்பா ரற்று மிகுந்திருக்கும் ;

நண்டின் நடனம் கரையோரம் 

   நாளுங் களிக்க நடந்தேறும் ;

தண்டின் மேலே தாமரைப்பூ

   தண்ணீர் தவழும் அதனிலைகள்

வண்டுகள் சுற்றித் தேன்குடிக்கும்

    வற்றா தூறும் எம்குளமே !


மொத்தம் மூன்று படித்துறைகள்

   மூழ்கித் ததும்பும் நீர்மட்டம் ;

நித்தம் நிற்கும் வெண்கொக்கு

   நீண்ட நேரந் தவமிருக்கும் ;

சத்தம் இன்றி மீன்கொத்த

   சலிப்பே இன்றிக் காத்திருக்கும் ;

புத்தம் புதிய கரைப்பூக்கள்

    புன்ன கையோடே அதைநோக்கும் !


மேட்டில் பசுக்கள் நின்றபடி

   மெல்ல குனிந்து நீரருந்தும் ;

ஓட்டின் சில்லை யெறிந்துவிட 

   ஓடும் நெளிந்து நீர்வளையம் ;

நீட்ட மான தூண்டிலிலே

   நெளியும் புழுவை மாட்டிவிட்டு

வாட்டமான இடம் பார்த்து

   வாகாய் அமர்ந்தே மீன்பிடிப்போம் !


தக்கை யடித்த மறுநொடியில்

   தத்த ளிக்கும் மீன்தெரியும் !

பக்க வாட்டில் 'பறி'தனிலே

   பறித்தே அதனைப் போட்டுவைப்போம் ;

தக்கை மரத்தில் சிறுபடகைத்

   தவழ விட்டே அகமகிழ்வோம் ;

சிக்கிக் கொண்டால்  சிரித்தபடி

   சிக்கல் நீக்கிச் சிறகடிப்போம் !


ஊற்று தானாய்ப் பொங்கியெழும்

   ஒவ்வொரு மூலையில் கிணறிருக்கும் ;

கீற்றைப் பின்ன மட்டைகளும்

   கிடக்கும் ஊறிக் குளத்தினிலே ;

ஏற்றம் போட்டு நீரிறைப்பார்

   எங்கும் பாயும் வாயல்வெளியில்

நாற்று நட்டு நெல்விளைய

   நன்றே பாய்ச்சல் தருங்குளமாம் !


படிகள் ஒட்டி நீர்ப்பரப்பில்

   பறக்கும் சிறிய பூச்சிகளைப்

பிடித்தே தின்ன நாநீட்டிப்

   புலன்கள் தீட்டிப் பார்த்தபடி

கொடிகள் இலைகள் நடுவினிலே

கொம்பேறி மூக்கன் கொலுவிருக்கும் ;

அடிகள் மெதுவாய் எடுத்துவைத்தே

   அசைந்தே ஆடி வரும்ஓணான் !


படியில் லாத கரையோரம்

   பழத்தைக் கொடுக்கும் மரமிருக்கும் ;

கடித்தே அணில்கள் துப்புவதைக்

   கவ்விப் பிடிக்க மீன்களெழும் ;

வடிவில் சிறிய 'நக்குவாரி'

   வழங்கும் குலைகள் தண்ணீரில்

படிந்துத் தேய்ந்தே உருண்டாடும்

   பார்க்க பார்க்க இனிமைதரும் !


நயமாய் நின்ற நினைவுகளை

   நானும் நினைத்தே அசைபோட்டேன் ;

செயலில் மிகுந்த தன்னலத்தால்

   செத்துப் போச்சே குளங்கூட ;

செயற்கை நிறைந்த உலகத்தில்

   செழிக்கும் வளத்தை அழித்திட்டோம் ;

இயற்கை தந்த இனியவரம்

  இன்று காணாப் பெருந்துயரம் !


                           -  இராதே


வெள்ளி, 3 ஜனவரி, 2025

பூனைக் குடும்பம்


 முந்தியே முட்டித் தள்ளி

   மூடிய கிண்ணம் சாய்த்துச்

சிந்திடும் பாலை உண்டு

   செப்பமாய்க் குழைத்து வாலை

உந்தியே சண்டை யிட்டே

   உறக்கத்தைக் கலைக்கும் நோக்கில்

பொந்திடை வெளியே வந்த

   பூனையின் குடும்பம் ஒன்று !



குட்டிகள் ஐந்து னோடே

   குலாவிடும் இணையும் தாயும்

தொட்டியில் குதித்தே ஏறித்

   துள்ளியே ஓட்டம் ஓடி

எட்டியே பார்க்கும் அந்த

   எலிகளை வேட்டை யாட

பெட்டிகள் மீதே தாவிப்

   பிடித்திடும் ஆட்டம் கண்டேன் !



கட்டிலில் கிடக்கும் என்மேல்

   கவினுறு  குட்டிப் பாய்ந்துச்

சட்டெனக் காலை நக்கிச்

   சாலவே உரசி நோக்கும்

பட்டெனக் காலைத் தூக்கிப்

   பற்றியே மார்பைக் கீறிச்

சிட்டென மறையும் ஆங்கோர்

   சீறிய சின்னக் குட்டி !



மேசையின் நிலைக்கண் ணாடி

   மீதேற முயலும் ஒன்றே

ஓசையோ டந்த ஆடி

   உடைந்தது 'தூள்தூள்' ஆக

மீசையை உயர்த்திக் காட்டி

   'மியா'வென எழுப்பும் சத்தம்

ஆசையைக் கூட்டி என்னை

   அழைத்ததே அடுத்த குட்டி !



அட்டியிட்ட டுக்கி வைத்த

   அழகான நூல்கள் தம்மை

தட்டியே சரித்து விட்டுத்

   தாய்ப்பூனை மடியி னூடே

சுட்டியாய் ஒளிந்தி ருக்கும்

   சூட்டிகை யான குட்டி

கொட்டிய நூல்கள் தாண்டிக்

   குதித்தோடும் தாயும் ஆங்கே !



குட்டிகள் ஐந்தும் தாயும்

   கூத்தாடும் செயல்க ளெல்லாம்

பட்டிய லிட்டுப் பாங்காய்ப்

   படம்போல மனத்துள் ளோடி

கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ள

   கேலியை எண்ணி மீண்டும்

வெட்டியாய்ச் சிரித்தேன் என்னுள்

    வேடிக்கை யானக் காட்சி !


                                        - இராதே

   

வியாழன், 2 ஜனவரி, 2025

போலி !

 போலி


கருத்தினை மறந்தே கொள்கை

   கரைத்ததை நீரில் விட்டு

விருதுகள் அடைய வேண்டி

   வேட்கையில் விலைகள் பேசி

நெருங்கிய நண்பர் ஊடே

   நெருக்கிடும் அழுத்தம் தந்தே

பருந்தெனக் குறியாய்ப் பார்த்துப்

   பரிந்துரை செய்யக் கோரி


நடுவரை நாடிச் சென்றே

   நயம்பட மடக்கி நாவால்

தொடுத்திடும் சொற்கள் கொண்டு

   தொழுதிடத் தாள்கள் பற்றி

விடுத்திடும் விருப்பம் செப்பி

   விரைகழல் சரணம் என்றே

எடுத்திரு கைகள் கூப்பி

   இறைஞ்சியே அழுது நின்று


தருகவே விருது பட்டம் 

   தயவதைக் காட்டச் சொல்லி

இருப்பிடம் சுற்றி வந்தே

   எடுபிடி பணிகள் ஆற்றி

உருகியே பிச்சை யேந்தி

   ஒருவழி யாகப் பெற்று

மருகியே புகழில் வேகும்

    மனிதரின் மதிப்புப் போலி !


                    - இராதே


காலை

 காலை


(விளம் - மா - மா)


செங்கதிர் விரியும் வானில்

   சிவப்பினை மெழுகும் மெல்ல

பொங்கிடும் நுரையோ பூத்துப்

   பொத்தென அலைகள் சாயும்;

தங்கிடும் சோழி சிப்பி

   சங்குகள் ஒதுங்கிச் சேரும்;

'அங்கியாம்' கருக்கல் பைய

   அவிழ்ந்திடக் காலை தோன்றும் !


திங்களோ பணிகள் ஓய்ந்துத்

   திரும்பிட எத்த னிக்கும் ;

தெங்கிலே தொங்கும் பாளை

   தெளிவுடன் சிரிப்பைக் காட்டும் ;

பங்கிடும் இரையைக் குஞ்சு 

   பறவைகள் முந்தித் தின்னும் ;

கங்குலின் கருமை தேய்ந்து

   காலையே வெளுப்பாய்த் தோன்றும் !


பூந்தளிர் சிந்தும் தேனோ

   பூவிதழ் வழியே சொட்டும் ;

மாந்திட வண்டின் கூட்டம்

   வரிசையின் அளவை நீட்டும் ;

நீந்திடும் திருக்கை வாளை

   நீள்கடல் மேலே துள்ளும் ;

ஏந்திடும் முகில்தன் கையில்

   எழுந்திடும் பரிதி காலை !


வெண்பனி நனைக்கும் புல்லை

   வெடுக்கென பூக்கும் முல்லை

கண்மணி கருவைக் காக்கும்

   கடமைசெய் இமையைப் போலேத்

தன்பணி இயற்கை சுற்றம்

   தழுவியே காலை தோன்றும்

நின்பணி கடமை யாற்றி

    நிறைவினைக் கொள்ளல் வேண்டும் !

                        - இராதே