இராதே

இராதே
eradevadassou

திங்கள், 24 ஜனவரி, 2022

எலுமிச்சை


 எலுமிச்சை  

புளிப்பானத்  தனிச்சுவையே எலுமிச்சை 

 புதுத்தெம்புத் தருங்கனியே எலுமிச்சை ; 

களிப்பானப் புத்துணர்வை உண்டாக்கும் 

கடுமூலநோய்த் தணிக்கமா மருந்தாகும் ; 

சலிப்பான உடல்சோர்வுந் தலைவலியும் 

சட்டெனவே பறந்தோட வழிவகுக்கும் ; 

மலிவாக கிடைத்தாலும் மருந்தாக 

வயிற்றிரைச்சல் செரிமானம் சரியாக்கும் ! 


வாய்நாற்றம் பல்வலியும் இருமலுமே 

 வந்தஇடம் தெரியாமல் ஓட்டிவிடும் ; 

பேய்ப்பசியைத் தூண்டிவிடும், பெரும்பித்தம், 

பெருங்குமட்டல் வாந்தியையும் தடுத்துவிடும் ; 

தாய்ப்போல கனிவாக அரவணைக்கும் 

தடந்தேளின் கொடியவிடம் முறித்துவிடும் ; 

நோய்த்தொற்றும் நச்சிழிவுக் கழிவுகளை 

நொடிப்பொழுதில் சிறுநீற்றில் வெளியேற்றும்!



யானைக்கால் நோய்க்குறைக்க இதுஉதவும் 

அழுக்கான 'நகசுத்தி' நோய்த்தீர்க்கும் ; 

பானைப்போல் பருத்தஉடல் இளைக்கவைக்கும் 

பதமாக குருதிக்குழாய் அடைப்பெடுக்கும் ; 

சேனையென உடல்போற்றி உயிர்க்காக்கும் 

சீற்றமுறும் வாய்ப்புண்ணைச் சீராக்கும் ; 

தேனைப்போல் இனிக்கின்ற நற்பயன்கள் 

தினந்தந்து நமைகாக்கும் எலுமிச்சை !

                                                                 -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக