இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

தேங்காய்

 தேங்காய்  

தென்னை மரத்தின் ' தெங்கம்பழம் ' 

 தேங்காய் என்றே அழைப்போமே ; 

தின்ன இனிப்புச் சுவைதருமே 

 தீயின் புண்கள் ஆற்றிடுமே ; 

நுண்மி எதிர்ப்பு திறன்மிகுமே 

 நோய்கள் ஓடி ஒளிந்திடுமே ; 

சுண்ணம் , இரும்பு , புரதத்தின் 

 சுரங்க மாமே தேங்காயே ! 



 தேங்கும் அமில வயிற்றுப்புண் 

 தேங்காய் உண்ணத் தேறிடுமே ; 

தேங்காய் எண்ணெய்த் தடவிவர 

 திரளும் பொடுகும் ஓடிடுமே ; 

தேங்காய் எண்ணெய் முடிவளர்க்கும் 

 தேமல், படையை நீக்கிடுமே ; 

தேங்காய்ப் பாலும் உடல்வளர்த்துத் 

 தேடி நச்சை நசுக்கிடுமே ! 



 தேங்காய் ' ஓடு' மருந்தாகும் 

 தேங்காய்ப் பூவும் மருந்தாகும் ; 

தேங்காய் இளநீர் மருந்தாகும் 

 தேங்காய் ' வழுக்கை ' மருந்தாகும் ; 

தேங்காய் எண்ணெய்ப் புண்ணாக்கும் 

 சிறப்பு மருந்தாய்ச் செயல்படுமே ; 

தேங்காய்ச் சுவைத்தே உண்போமே 

 சேரும் நன்மைகள் பெறுவோமே !

                                                                  -  இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக