இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

நீடு துயில் நீக்கவந்த ஞாயிறு !

 நீடு துயில் நீக்கவந்த ஞாயிறே ! 

 ( தமிழ்மாமணி 'ஆனந்தா' ந.கோவிந்தசாமி அவர்களின் 104 ஆவது பிறந்தநாள் 18.01.2022 )


தும்பை தோற்கும் தூய வெள்ளை 

 துலங்கும் சிரிப்பைத் தூவுகின்ற ராசரே ; 

அம்பை போல விரைந்துச் சென்று 

 அருமை தமிழை ஆதரித்தத் தீரரே ; 

வம்புப் பேசி வாழும் உலகில் 

 வாய்மை பேசிப் பேரெடுத்தத் தூயரே ; 

தெம்பு கொண்டு தேகப் பயிற்சி 

 தினமும் கண்டே ஆர்ப்பரித்தச் சூரரே ! 



 இளமை தொட்டே இலக்கி யத்தை 

 ஈர்த்துக் குடித்தே ஈன்றமழை மேகமே ; 

வளமை யான குரலின் வீச்சில் 

 வண்ணத் தமிழை ஒலித்துநின்ற கீதமே ; 

தலைமை யேற்றுத் தொண்டில் துயரைத் 

தடுக்கப் பாய்ந்தே ஓடிவந்த நேயரே ; 

நிலையில் நின்றே ஒழுக்கம் ஓம்பி 

 நீடு துயிலை நீக்கவந்த ஞாயிறே ! 



 கன்னித் தமிழைக் கம்பர் புகழைக் 

கண்ணின் இமையாய்க் காத்துநின்ற வீரரே ; 

அன்பர் சங்கர் தாசர் நினைவை 

 ஆண்டு தோறும் போற்றிவந்த சீலரே ; 

இன்பத் தமிழை அள்ளிப் பருகி 

 இளமை எழிலில் தோன்றிவந்த ஈசரே ; 

அன்பு வெள்ளம் புரண்டே ஓடி 

ஆனந் தஆறாய்ப் பாய்ந்தெழுந்த நேசரே ! 



 காலைத் தொட்டே காலன் ஓட 

கடுமை யான நடைபயில்கோ விந்தரே ; 

வேளை தோறும் உணவை அளவாய்த்

 தேடும் வேள்வி நிகழ்த்திவென்ற சித்தரே ! 

தாளை வணங்கி போற்றி நெகிழ்ந்தேன் 

தமிழின் இசையைக் கூட்டுகின்ற நாதரே ; 

நாளை உலகம் உந்தன் வாழ்வை 

நாளும் நாளும் வாழ்த்தியென்றும் பாடுமே !

                                                                    - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக