இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

தமிழுணர்வு


 தமிழுணர்வு !


பாடிப்பாடி நம்மொழிப் பரவச்செய்தல் நம்பணி ;

ஓடிஓடி செம்மொழி ஒளிரச்செய்தல் நம்வழி ;

நாடிநாடி நம்தமிழ் நாளுமோங்க செய்வோமே ;

கோடிகோடி தமிழரின் கொள்கைகொள்கை கொள்கையே !


பேசுகின்றோம் பிறமொழி பேச்சிலில்லை தமிழ்மொழி ;

வீசுகின்ற சொல்லிலும் வியன்றமிழும் இல்லையே ;

பூசிப்பூசி மழுப்பியே பொற்றமிழை அழிக்கிறார் ;

கூசிக்கூசிக் கூனிகுறுகி கொள்கைவிடுதல் எங்ஙனம் ?


எழுத்திலில்லை எந்தமிழ் இளைஞர்நாவில் இல்லையே ;

பழுத்தமூத்த மொழியினைப் பாரிலழிக்க லாகுமோ ?

கொழுத்தபகை வர்வன்மத்தால் குன்றலாமோ எம்மொழி ?

அழுத்தங்கொடுத்தே மீண்டும்நாம் அன்னைத்தமிழை நாட்டுவோம் !


வழக்குரைக்கும் அறமன்ற வழக்கிலில்லை எம்தமிழ் ;

முழக்குகின்ற வெளியெல்லாம் முத்தமிழைக் காணோமே ;

சுழலுகின்ற புவியிலே சூழ்ச்சியின் பிடிக்குள்ளே

உழலச்செய்தே தமிழினை ஒழித்தழிக்கப் பார்க்கிறார் !


அன்னைத்தமிழ் வாழ்த்தினை அவமதித்தே அமர்கிறார் ;

அன்னைஆண்டாள் பெயரிலே அடாவடிகள் செய்கிறார் ;

மண்ணொழிந்த வடமொழி  மறுபிறவி எடுத்திட

எண்ணும்ஈனத் துறவியர் எழுச்சித்தமிழை மிதிக்கிறார் !


தாய்தடுத்தி டினும்விடோம்; தமிழழிப்போ ரைவிடோம் ;

ஏய்த்தவீணர் எவரையும் எளிதில்வாழ விட்டிடோம் ;

பொய்க்கவைத்தே சூதினைப் பொடிப்பொடிக ளாக்கியே

தாய்த்தமிழே வாழ்வுற தருவோமெங்கள் உயிரையே !


             - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக