தூரம்
வாய்க்கால் வரப்புகளில்
எவ்வளவு தூரம்
நடந்திருப்பேன்
எண்ணாமல் கழிகிறது
பொழுது
வெண்நுரை முன்னுரையில்
நீர்ப் பாயும்
உரசலில் நெளிந்து
கிடக்கிறது வாய்க்கால்
கரையாடி வலைபுகும்
நண்டுகள்
தலைமுங்கி நீர்ச் சிலுப்பும்
காகங்கள்
ஆங்காங்கே
தலைநீட்டிச் சிரிக்கும்
ஒற்றைப் பூக்கள்
புல்பரப்பில்
வெண்கோடு தீட்டும்
நத்தை
பசும்புல்லின் நுனிஆடும்
வெட்டுக்கிளி
நா நீட்டி ஏமாறும்
ஒணான்
கிளை இடுக்கின் உள்வழிந்து
இளம்மஞ்சள் பூசும்
மாலை வெயில்
தூரம் அதிகமில்லை
தொடரலாம்
மனது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக