சொற்கேட்டல் இன்பம் !
படுக்கையில் கால்கை ஆட்டிப்
படிகளில் தவழ்ந்தே யேறித்
தடுக்கியே விழுந்து வாரித்
தத்தியே நடக்கக் கற்று
அடுப்படி நுழைந்து சுற்றி
ஆக்கிய சோற்றைக் கொட்டிக்
கொடுக்குகள் அடிக்கும் கொட்டம்
குளிருதாம் மனத்துள் இன்பம் !
அடுக்கிய உடைகள் பொம்மை
அனைத்தையும் அள்ளி வீசி
இடுக்கிலே புகுந்து வந்தே
எட்டியே குறும்பாய்ப் பார்த்துத்
துடுக்காக ஓடி யாடித்
துள்ளியே துள்ள லோடே
சொடுக்கிடும் நொடிக்குள் ளாக
சுழன்றாடும் மழலை இன்பம் !
சுண்ணாம்புச் சுவற்றி லெல்லாம்
சுரண்டியே கிறுக்கி வைத்துக்
கண்ணாடிக் கதவைத் தட்டிக்
கற்கண்டாய்ச் சிதற விட்டுப்
பின்னாடி ஒளிந்து நின்று
பிறைபோலே எட்டிப் பார்த்து
முன்னாடிக் குழையும் பிஞ்சின்
முகத்தாடல் கொள்ளை இன்பம் !
அன்னைமுந் தானைப் பற்றி
அடிக்கடி காலைச் சுற்றிக்
கண்ணாக வளர்க்குந் தந்தை
கைகளில் பிடித்துத் தொங்கி
வண்ணமாய்க் கொஞ்சிக் குலாவி
வாயாற முத்த மிட்டே
எண்ணத்தை ஆளும் செல்வ
இளம்மழலைச் சொற்கள் இன்பம் !
தன்மக்கள் தீண்டல் இன்பம்
தரத்தாலே உயர்ந்த தென்பார்;
வெண்சங்கும் குழலும் யாழும்
வெற்றிசைதான் மழலை முன்னே ;
இன்சொல்லாய் அவர்தம் சொற்கள்
இசைக்கின்ற சொற்கள் தானே ;
இன்பமுறு மக்கள் பேறே
இனிதான தென்பான் ஐயன் !
இன்னிசையில் உலகம் சொக்க
இயம்புகிற சொற்கள் யாவும்
மண்ணசைக்கும் மழலை முன்னர்
மண்டியிடும் சொற்கள் தாமே;
விண்ணுயர நின்ற ஐயன்
விருப்புடன் மக்கள் பேற்றின்
மாண்புகளைச் செவிக்குள் ஈந்தே
மகத்தான குறள்தந் தானே !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக