இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

சொற்கேட்டல் இன்பம்

 சொற்கேட்டல் இன்பம் !


படுக்கையில் கால்கை  ஆட்டிப்

   படிகளில் தவழ்ந்தே யேறித்

தடுக்கியே விழுந்து வாரித்

   தத்தியே நடக்கக் கற்று

அடுப்படி நுழைந்து சுற்றி

    ஆக்கிய சோற்றைக் கொட்டிக்

கொடுக்குகள் அடிக்கும் கொட்டம்

   குளிருதாம் மனத்துள் இன்பம் !


அடுக்கிய உடைகள் பொம்மை

   அனைத்தையும் அள்ளி வீசி

இடுக்கிலே புகுந்து வந்தே

    எட்டியே குறும்பாய்ப் பார்த்துத்

துடுக்காக ஓடி யாடித்

   துள்ளியே துள்ள லோடே

சொடுக்கிடும் நொடிக்குள் ளாக

   சுழன்றாடும் மழலை இன்பம் !


சுண்ணாம்புச் சுவற்றி லெல்லாம்

   சுரண்டியே கிறுக்கி வைத்துக்

கண்ணாடிக் கதவைத் தட்டிக்

   கற்கண்டாய்ச் சிதற விட்டுப்

பின்னாடி ஒளிந்து நின்று

   பிறைபோலே எட்டிப் பார்த்து

முன்னாடிக் குழையும் பிஞ்சின்

   முகத்தாடல் கொள்ளை இன்பம் !


அன்னைமுந் தானைப் பற்றி

   அடிக்கடி காலைச் சுற்றிக்

கண்ணாக வளர்க்குந் தந்தை

   கைகளில் பிடித்துத் தொங்கி

வண்ணமாய்க் கொஞ்சிக் குலாவி

   வாயாற முத்த மிட்டே 

எண்ணத்தை ஆளும் செல்வ

   இளம்மழலைச் சொற்கள் இன்பம் !


தன்மக்கள் தீண்டல் இன்பம்

   தரத்தாலே உயர்ந்த தென்பார்;

வெண்சங்கும் குழலும் யாழும்

   வெற்றிசைதான் மழலை முன்னே ;

இன்சொல்லாய் அவர்தம் சொற்கள் 

   இசைக்கின்ற சொற்கள் தானே ;

இன்பமுறு மக்கள் பேறே

   இனிதான தென்பான் ஐயன் !


இன்னிசையில் உலகம் சொக்க

   இயம்புகிற சொற்கள் யாவும்

மண்ணசைக்கும் மழலை  முன்னர்

   மண்டியிடும் சொற்கள் தாமே;

விண்ணுயர நின்ற ஐயன்

விருப்புடன் மக்கள் பேற்றின்

மாண்புகளைச் செவிக்குள் ஈந்தே

   மகத்தான குறள்தந் தானே !

                            - இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக